மும்பை தாக்குதல்-ஐ.நா. வேண்டாம்: அத்வானி
டெல்லி: மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபைக்குக் கொண்டு செல்லக் கூடாது என பாஜக தலைவர் அத்வானி கூறியுள்ளார்.
மக்களவையில் நடந்த விவாதத்தில் பேசிய அவர்,
கடந்த 1950ம் ஆண்டு காஷ்மீர் பிரச்சனையை, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலுக்கு, இந்தியா கொண்டு போனதன் விளைவு, இன்னும் சிக்கல் நீடித்து வருகிறது. அதே போன்ற தவறை, மும்பை பயங்கரவாத தாக்குதல் பிரச்சனையிலும் செய்து விடக்கூடாது.
எனவே, இந்தப் பிரச்சனையை ஐ.நாவுக்குக் கொண்டு செல்லும் முடிவை மத்திய அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும்.
இந்தத் தாக்குதலுக்கு உள்துறை அமைச்சர் மற்றும் மாநில முதல்வர் ஆகிய இருவருக்கு மட்டுமே பொறுப்பு என்று தட்டிக் கழித்து விட முடியாது. பிரதமரை பதவிவிலக வேண்டுமென நாங்கள் வலியுறுத்த மாட்டோம். ஆனாலும், எதிர்வரும் பொதுத்தேர்தலில் மக்கள் இதற்கு தகுந்த தீர்ப்பை வழங்குவர்.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தல்களின் தீர்ப்புகளால், பயங்கரவாதம் ஒரு பிரச்னையல்ல என்றாகிவிடாது. டெல்லி மற்றும் ராஜஸ்தானில், பாஜக தோல்வியடைந்ததால், மும்பை தாக்குதல் விவகாரத்தில் மக்களுக்கு கோபம் ஏற்படவில்லை என்று அர்த்தம் அல்ல.
சம்பந்தப்பட்ட மாநிலங்களில் நிலவிய உட்கட்சி பூசலால், பாஜக தோல்வி அடைந்தது. ஆனாலும், காங்கிரஸ் பெற்றிருப்பது வெற்றியல்ல என்றார் அத்வானி.












Click it and Unblock the Notifications