முதல்வரின் செயலர் சண்முகநாதன் ராஜினாமா?: சமாதான முயற்சியில் ஸ்டாலின்!

முதல்வரின் நிழலாக எப்போதும் அவரைப் பின்தொடர்பவர் சண்முகநாதன். கருணாநிதியின் தனிச் செயலாளராக 40 ஆண்டுகளுக்கும் மேலாக பணி புரிந்து வருபவர் சண்முகநாதன்.
ஆரம்பத்தில் காவல்துறையின் உளவுப் பிரிவில் பணியாற்றினார் சண்முகநாதன். 1967க்கு முன் திமுக முன்னணி தலைவர்களின் மேடைப் பேச்சுக்களை சுருக்கெழுத்து மூலம் குறிப்பெடுத்து அதை உளவுத்துறைக்கு வழங்கும் பணியில் இருந்தார்.
அவரை அடிக்கடி தனது கூட்டங்களில் பார்த்த கருணாநிதி, யார் என்று விசாரித்து முதல்வரான பின்னர் அவரையே தனது உதவியாளராக்கிக் கொண்டார்.
அன்றுமுதல் முதல்வரின் நிழலாக சண்முகநாதன் தொடர்ந்து வருகிறார். கிட்டத்தட்ட முதல்வர் குடும்பத்தில் ஒருவராகவே அவர் மாறிவிட்டார். முதல்வரின் நம்பிக்கைக்குரிய மனிதாராக இருப்பவர். கருணாநிதி முதல்வர் பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், கூடவே இருந்து வந்தார்.
இன்றைக்கும் கருணாநிதியின் பேச்சுக்கள், பேட்டிகள் அனைத்தையும் வரிபிசகாமல், வார்த்தை மாறாமல் குறிப்பெடுத்து அவற்றை பத்திரிகைகளுக்கு அனுப்பும் பணியினையும் செய்து வருபவர் சண்முகநாதன்.
5வது முறையாக முதலமைச்சர் பொறுப்பை கருணாநிதி ஏற்றதும், அவருடைய செயலாளர்களில் ஒருவராக சண்முகநாதனுக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டது.
ஆனால் இந்த நியமனம்தான் அவருக்கு பல சிக்கல்களைத் தோற்றுவித்தாகக் கூறப்படுகிறது. முதல்வர் அலுவலகத்தில் உள்ள செயலாளர்களுக்குள் ஏற்பட்ட மோதல்தான் அவரைப் பதவி விலக வைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. முக்கியமாக முதல்வரின் இரண்டாவது செயலாளருடன் அவருக்கு கடும் மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
தம்முடைய மனைவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் பதவியிலிருந்து விலகி குடும்பப் பொறுப்பை கவனிப்பதற்காக செல்வதாக தனது ராஜினாமா கடிதத்தில் சண்முகநாதன் குறிப்பிட்டுள்ளதாக முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சண்முகநாதனின் ராஜினாமாவை உறுதிப்படுத்த முதல்வர் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டோம்.
முதல்வரின் செயலாளர்கள் யாரும் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் சொல்ல முடியாத நிலையில் இருப்பதாகத் தெரிவித்தனர்.
பொதுத் துறைச் செயலர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டபோது, இந்த செய்தி உண்மைதான் என்றும், ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க இன்னமும் மேலிடத்திலிருந்து உத்தரவு வரவில்லை என்றும் கூறினர்.
தலைமைச் செயலக செய்தித் தொடர்பாளர் அலுவலகத்திலும் இதையே தெரிவித்தனர்.
சமாதான முயற்சி:
இந்நிலையில், சண்முகநாதனைச் சமாதானப்படுத்தி மீண்டும் அழைத்து வரும் முயற்சியில், சண்முகநாதன் மீது பெரும் மதிப்பு கொண்ட உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் இறங்கியுள்ளார்.
முதல்வருக்கு நெருக்கமாக இருந்தாலும் அனாவசியமாக கட்சி, அரசு, அரசியலில் தலையிடாதவர். தனது வேலையை மட்டும் பார்ப்பவர் அவர்.
அவர் மீது முதல்வர் குடும்பத்திலும் மிகுந்த மரியாதை உண்டு.












Click it and Unblock the Notifications