'மும்பை'-தமிழகத்தில் குறையும் சுற்றுலா பயணிகள்
கோவை: மும்பையில் நடந்த தாக்குதல் காரணமாக, தமிழகத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அமைச்சர் சுரேஷ்ராஜன் கூறியுள்ளார்.
கோவை காந்திபுரம் தமிழ்நாடு ஹோட்டல் வளாகத்தில், சுற்றுலா அலுவலகத்தை கால்நடைத்துறை அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி திறந்து வைத்தார். சுற்றுலாத் துறை அமைச்சர் சுரேஷ்ராஜன், சுற்றுலாத் துறைச் செலாளர் இறையன்பு உட்பட பலர் இதில் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுரேஷ் ராஜன்,
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்குச் சொந்தமான ஹோட்டல்களை மேம்படுத்த, கடந்த இரு ஆண்டுகளில் ரூ. 10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க, சுற்றுலாத் தலங்களில் ரூ. 100 கோடி செலவில் மேம்பாட்டுப் பணிகள் நடந்து வருகின்றன.
தமிழகத்திலுள்ள சுற்றுலா மையங்களை மேம்படுத்த, இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களுக்கு ஒரு அலுவலகம் என 14 சுற்றுலா அலுவலகங்கள் செயல்படுகின்றன. திருவண்ணாமலை, வேலூர், செட்டிநாடு ஆகிய இடங்களிலும் சுற்றுலா அலுவலகங்கள் திறக்கப்படவுள்ளன.
ஆண்டுதோறும் தமிழகத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 22 சதவீதம் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் வெளிநாடுகளில் இருந்து 17 லட்சம் சுற்றுலாப் பயணிகள் தமிழகம் வந்துள்ளனர். அதே போல, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் 5.5 கோடி பேர் வருகை தந்துள்ளனர்.
ஆனால், மும்பையில் நடந்த குண்டு வெடிப்பு காரணமாக, தமிழகத்தில் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்குச் சொந்தமான ஹோட்டல்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இது, நாளடைவில் சரியாகி விடும்.
வால்பாறையில் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு போதிய வசதி இல்லை. இதை சரி செய்ய, ஒரு ஏக்கர் பரப்பளவில் ரூ. 1 கோடி செலவி்ல் விருந்தினர் மாளிகை கட்டப்படும். வால்பாறையில் படகு இல்லம், பூங்கா ஆகியவை அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி டாப்ஸ்லிப் இந்திரா காந்தி புலிகள் காப்பக மேம்பாட்டுக்காக, ரூ. 1.96 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் வனபத்ர காளியம்மன் கோவில் வளாகத்தில், ரூ. 69 லட்சம் செலவில் உடை மாற்றும் அறைகள், கழிப்பிட வசதி, வாகன நிறுத்துமிடம் மற்றும் ஓய்வு அறைகள் கட்டும் பணி நடக்கிறது.
நாட்டுப்புறக் கலைகளை அழியாமல் பாதுகாக்கவும், நாட்டுப்புறக் கலைஞர்களை ஊக்கப்படுத்தவும், சென்னையில் 'சங்கமம்' நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதே போல வரும் பொங்கல் விடுமுறையின் போது, கோவையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications