காஷ்மீர் விடுதலைக்காக தொடர்ந்து போராடுவோம்: லஷ்கர்
ஸ்ரீநகர்: ஐ.நா. பாதுகாப்பு சபை, ஜமாத் உத் தவா அமைப்பைத் தடை செய்தாலும் கூட காஷ்மீரில் எங்களது போராட்டம் தொடர்ந்து நடைபெறும். அதிலிருந்து பின்வாங்க மாட்டோம் என லஷ்கர் இ தொய்பா கொக்கரித்துள்ளது.
இதுகுறித்து ஸ்ரீநகரிலிருந்து வெளியாகும் ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றுக்கு லஷ்கர் அமைப்பின் காஷ்மீர் பிரிவு தலைமை நிர்வாகி காரி அப்துல் வாஹித் காஷ்மீரி அனுப்பியுள்ள அறிக்கையில், காஷ்மீர் பிரச்சினைக்கு, காஷ்மீரிகளின் விருப்பத்திற்கேற்ற முடிவை இந்தியா காணும் வரையில் எங்களது போராட்டம் ஓயாது.
எங்களுக்கும் தாலிபான், அல் கொய்தா அமைப்புகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
லஷ்கர் மீதான தடை நியாயமற்றது. கடந்த காலத்திலும் அந்தத் தவறை உலக சமுதாயம் செய்தது. இப்போது ஜமாத் உத் தவாவைத் தடை செய்து மீண்டும் தவறு செய்துள்ளனர். இதன் மூலம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மக்களின் விருப்பத்தை மீறி நடந்து கொண்டுள்ளது.
தடை விதிப்பதற்கு முன்பு எங்களது உண்மையான நோக்கத்தை அறிந்து கொள்ள, புரிந்து கொள்ள ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தவறி விட்டது என்று கூறியிருந்தார் வாஹித்.