கஸாப்புக்காக வாதாட தயார்: முன்னாள் அட்வகேட் ஜெனரல்
மும்பை: மும்பைத் தீவிரவாதத் தாக்குதலின் போது சிக்கிய முகம்மது அஜ்மல் அமீர் இமான் கஸாபுக்காக வாதாடத் தயார் என மகாராஷ்டிர மாநில முன்னாள் கூடுதல் அரசு வழக்கறிஞர் பி. ஜனார்த்தன் கூறியுள்ளார். அப்படிச் செய்யாவிட்டால் அது மனித உரிமை மீறல் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கஸாப்புக்காக வாதாட வக்கீல்கள் யாரும் இதுவரை முன்வரவில்லை. இந்த நிலையில் அவருக்காக வாதாட ஜனார்த்தன் முன்வந்துள்ளார்.
பாகிஸ்தான் தூதரகம் தன்னை அணுகினால் நிச்சயம் கஸாப்புக்காக வாதிடுவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மகாராஷ்டிர மாநில அரசு நடுநிலையான விசாரணையை உறுதி செய்ய வேண்டும். குற்றம் சாட்டப்பட்டுள்ள கஸாப்புக்கும் ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் அது மனித உரிமை மீறலாகப் போய் விடும்.
மனித உரிமை மீறல் நடந்து விடாமல் மாநில அரசு பார்த்துக் கொள்ள வேண்டும். அதனால்தான் கஸாப்புக்காக வாதாட நான் முன்வந்துள்ளேன். ஆனால் பாகிஸ்தான் அரசு என்னை அணுகி கேட்டுக் கொண்டால் மட்டுமே கஸாப்புக்காக நான் ஆஜராவேன்.
அஜ்மல் கஸாப் கையும் களவுமாக பிடிபட்டுள்ளார். எனவே தன்னைத் தற்காத்துக் கொள்ள அவருக்கு அதிகம் வாய்ப்பில்லை. அதேசமயம், கிரிமினல் சட்டப்படி, குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவரும் வக்கீல் வைத்துக் கொண்டு தனது தரப்பு வாதத்தை எடுத்து வைக்க உரிமை உண்டு என்றார் ஜனார்த்தன்.
முன்னதாக, பாம்பே பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட் வக்கீல்கள் சங்கம், கஸாப்புக்காக எந்த வக்கீலும் ஆஜராகக் கூடாது என்று கோரி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது என்பது நினைவிருக்கலாம்.