4 ஜமாத உத் தவா நிர்வாகிகளை விடுவி்த்த பாக்.!!!
இஸ்லாமாபாத்: கைது செய்த ஓரிரு நாட்களிலேயே தடை செய்யப்பட்ட ஜமாத் உத் தவா அமைப்பைச் சேர்ந்த நான்கு பேரை விடுதலை செய்து விட்டது பாகிஸ்தான்.
இந்தியா மற்றும் அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று ஜமாத் உத் தவா அமைப்பை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை செய்தது. அந்த அமைப்பின் நிறுவனர் முகம்மது ஹபீஸ் சயீத், மும்பை சம்பவத்திற்குக் காரணமான லக்வி உள்ளிட்ட நான்கு பேரை சர்வதேச பயங்கரவாதிகளாகவும் அறிவித்தது.
இதையடுத்து ஹபீஸ் சயீத் உள்ளிட்டோரை பாகிஸ்தான் போலீஸார் கைது செய்தனர். ஜமாத் அமைப்பின் அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டன. சொத்துக்களையும் முடக்க பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்துள்ளது. ஏராளமான பேரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட நான்கு ஜமாத் நிர்வாகிகளை பாகிஸ்தான் நிர்வாகம் விடுவித்து விட்டது.
மேலும் ஜமாத் அமைப்பின் மூத்த தலைவர் மெளலானா அப்துல் அஜீஸ் அல்வியின் வீட்டுக்கு அளித்து வந்த போலீஸ் காவலையும் விலக்கி விட்டது.
இதுகுறித்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தலைநகரான முஸாபராபாத்தின் இணை ஆணையர் செளத்ரி இம்தியாஸ் கூறுகையில், அல்வியின் வீட்டுக்கு அளித்து வந்த போலீஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், அவரை அந்த பகுதியை விட்டு முன் அனுமதி இல்லாமல் வெளியேறக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.
அல்வி, பாதுகாப்பு காரணங்களுக்காக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். முன் அனுமதி இல்லாமல் அவர் எங்கும் செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கைது செய்யப்பட்ட ஜமாத் அமைப்பைச் சேர்ந்த நான்கு பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சாதாரணமானவர்கள் என்பதால் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஜமாத் உத் தவா அமைப்பை நிர்வகித்து வந்தார் அல்வி. கடந்த வியாழக்கிழமை கர்யான் கிராமத்தில் உள்ள அவருடைய வீட்டில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications