தாஜ் ஹோட்டல் மீண்டெளும் - தீவிரவாதிகள் தோற்பார்கள்: டாடா
மும்பை தீவிரவாதத் தாக்குதலில் பெரும் சேதத்தை சந்தித்த ஹோட்டல் தாஜ். அந்த சம்பவத்திற்குப் பின்னர் ஹோட்டலின் ஒரு பகுதி சீரமைக்கப்பட்டுள்ளது. வருகிற 21ம் தேதி அப்பகுதி திறக்கப்படவுள்ளது.
இந்த நிலையில், தாஜ் ஹோட்டல் மறு சீரமைப்பு, பாதுகாப்பு, மீண்டும் திறப்பு ஆகியவை குறித்து ரத்தன் டாடா கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த கால வரலாற்றிலிருந்து மும்பை பாடம் படிக்காமல் விட்டு விட்டது. எதையும் எதிர்கொள்ளும் தயார் நிலையில் நாம் இல்லாமல் போய் விட்டோம்.
கடந்த காலங்களில் இங்கு நடந்த குண்டுவெடிப்புகள், தீவிரவாதத் தாக்குதல்களிலிருந்து நாம் விழிப்புணர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆனால் நமது அதிகாரிகள் அதைச் செய்யத் தவறி விட்டார்கள்.
தீவிரவாத செயல்கள் நடந்தால் அதை எப்படி சமாளிப்பது, தடுப்பது, ஒடுக்குவது என்பது குறித்த ஆயத்த நிலையில் நாம் இல்லை.
உலகின் எந்த நாட்டிலும், ஒரு தீவிரவாத செயலை உலக நாடுகளின் தொலைக்காட்சிகள் நேரடியாக கிட்டத்தட்ட 3 நாட்களுக்கு ஒளிபரப்பியதாக நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை.
தீவிரவாத தாக்குதல் என்றால் ஐந்து நிமிடமோ அல்லது ஒரு மணி நேரமோ அல்லது 2 மணி நேரமோ நடக்கும் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் மும்பையில் நடந்த தாக்குதலை உலக நாடுகள் அனைத்தும் 3 நாட்களாக பார்த்துக் கொண்டிருந்தன.
தொலைக்காட்சிகளின் புண்ணியத்தால் தீவிரவாத அமைப்புகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் அநாவசியாக இலவச விளம்பரம் கிடைத்து விட்டது. இதுபோல செய்தால்தான் விளம்பரம் கிடைக்கும் என்ற எண்ணும் இனி தீவிரவாதிகளுக்கு தோன்றலாம்.
மும்பை தீவிரவாத செயல் குறித்து மக்களிடையே நிலவும் கோபமும், அதிருப்தியும் நியாயமானதுதான் என்பது எனது கருத்து.
மும்பை தாக்குதலை அனைத்து மதத்தினரும் ஒரே குரலில் கண்டித்துள்ளது எனக்கு ஆறுதலைத் தருகிறது. தாஜ் ஹோட்டல் மறு சீரமைக்கப்படும். நான் முன்பு கூறியபடி ஒவ்வொரு அங்குலமும் சீரமைக்கப்படும். தாஜ் மீண்டும் எழுந்து நிற்கும்.
தீவிரவாதிகள் நம்மை மீண்டும் தாக்கலாம். ஆனால் அவர்களுக்கு ஒருபோதும் வெற்றி கிடைக்காது. அதை நாம் மீண்டும் நிரூபிப்போம். அதை நிரூபிக்கும் வகையில் தாஜ் ஹோட்டல் மீண்டும் புதுப்பொலிவுடன் திகழும் என்றார் டாடா.