சிபிஐ அதிகாரிகளுக்கு இனி ஆயுதப் பயிற்சி கிடையாது
டெல்லி: சிபிஐ அதிகாரிகளுக்கு இனி ஆயுதப் பயிற்சி கொடுக்கப்பட மாட்டாது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிபிஐ அதிகாரிகளுக்கான பயிற்சித் திட்டத்தில் ஆயுதப் பயிற்சி குறித்த பாடம் நீக்கப்பட்டு விட்டது.
இதுகுறித்து சிபிஐ இணை இயக்குநர் சலீம் அலி கூறுகையில், சிபிஐ அதிகாரிகளுக்கான பயிற்சிப் பாடத் திட்டத்திலிருந்து ஆயுதப் பயிற்சி பிரிவை எடுத்து விட்டோம். அதற்குப் பதிலாக லேட்டஸ்ட் சாப்ட்வேர் மற்றும் அதி நவீன சாதனங்களை எப்படிப் பயன்படுத்துவது, கையாளுவது என்ற திறமையை வளர்த்துக் கொள்வதில் கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
விசாரணைக்கு இவை மிகவும் உதவும் என்பதால் இதில் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளது.
உலகில் இன்று நடக்கும் ஒவ்வொரு தீவிரவாதத் தாக்குதலும், கடைசியில் சைபர் ஸ்பேஸில்தான் வந்து முடிகிறது. எனவே புதிய அதிகாரிகளுக்கு, சைபர் குற்றங்களை எப்படிக் கண்டுபிடிப்பது என்பதில் அதிக பயிற்சி அளிக்கப்படும்.
காஸியாபாத்தில் உள்ள சிபிஐ அகாடமியில் தற்போது 38 பயிற்சி சப் இன்ஸ்பெக்டர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அடுத்த தலைமுறை சிபிஐ அதிகாரிகளாக இவர்கள் உருவாகி வருகின்றனர்.
கம்ப்யூட்டர் முதல் காரோட்டுவது வரை இவர்களுக்கு கற்றுத் தரப்பட்டு வருகிறது. அதேபோல அதி நவீன தொழில்நுட்பங்கள் குறித்த அறிவையும் இவர்களுக்கு புகட்டுகிறோம். எந்த வகையான சூழ்நிலையையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு செயல்படும் திறனுடன் இவர்கள் வெளியே வருவார்கள்.
இப்போதைய காலகட்டத்தில் உடல் திறன் மட்டும் முக்கியமாக இல்லை. மாறாக புத்திசாலித்தனமும் அதிக அளவில் தேவைப்படுகிறது. அதற்கேற்ப இந்த இளம் அதிகாரிகள் பயிற்சி அளிக்கப்படுகிறார்கள் என்றார் அலி.












Click it and Unblock the Notifications