தேசிய புலனாய்வு ஏஜென்சி மற்றும் தீவிரவாத தடுப்பு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்
டெல்லி: 2 தீவிரவாதத் தடுப்பு மசோதாக்கள் நேற்று லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டன. பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளும் இந்த மசோதாக்களுக்கு முழு ஆதரவு தெரிவித்தன.
இந்தியாவின் எப்பிஐ என வர்ணிக்கப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சியை அமைப்பதற்கான சட்ட மசோதா மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடு்பு சட்டத் திருத்த மசோதா ஆகியவை நேற்று லோக்சபாவில் அறிமுகப்படுத்தப்பட்டன.
அதன் மீது நடந்த விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பேசினர். சுமார் 5 மணி நேரம் நடந்த இந்த விவாதத்தின்போது அனைத்துக் கட்சிகளும் மசோதாக்களை ஆதரிப்பதாக அறிவித்தன. பின்னர் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் விவாதத்திற்குப் பதிலளித்தார்.
அவர் பேசுகையில், தேசிய புலனாய்வு அமைப்பு, தீவிரவாத வழக்குகளை விசாரிக்கும் மாநில அரசுகளின் அதிகாரங்களுக்கு மதிப்பு அளிக்கும். தீவிரவாத வழக்குகள் பற்றி மாநில அரசுகள் மத்திய அரசுக்குத் தகவல் கொடுத்த 15 நாட்களுக்குள் அந்த வழக்கை தாங்கள் ஏற்று நடத்தத் தகுதியானதுதானா என்று என்.ஐ.ஏ முடிவு செய்யும்.
பல வழக்குகளில் மாநில அரசுகளும் இணைந்து செயல்படும்படி கேட்டுக் கொள்ளும் என்று எதிர்பார்க்கிறேன்.
அணு சக்தி சட்டம், கடத்தல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 8 சட்டங்கள் தொடர்புடைய குற்றங்கள் பற்றி என்.ஐ.ஏ அமைப்பு விசாரிக்கும். இந்த வழக்கு விசாரணைக்காக அமைக்கப்படும் தனி கோர்ட் நீதிபதிகள், அந்தந்த மாநில ஐகோர்ட் தலைமை நீதிபதிகளைக் கலந்து நியமிக்கப்படுவார்கள்.
ஒவ்வொரு நாளும் வழக்கு விசாரணை நடைபெறும். தீர்ப்பு தொடர்பான அப்பீல் வழக்குகள் ஐகோர்ட் டிவிஷன் பெஞ்ச்களில் தொடரப்பட்டு, 3 மாதங்களில் பைசல் செய்யப்பட வேண்டும். மொத்தத்தில் மத்திய, மாநில அரசுகளின் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படாதபடி இந்த சட்டம் அமையும்.
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத் திருத்த மசோதா விதிமுறைகள், ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட பொடா சட்டத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. இந்த சட்ட விதிமுறைகள் தவறாகப் பயன்படுத்தப்படுமோ என்ற அச்சம் தேவை இல்லை. சம்பந்தம் இல்லாத விதிகள் இதில் ஏதும் இல்லை. பொடா சட்டத்தில் அரசு வக்கீலுக்கு அதிகமான அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால் இந்த சட்டத்தில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்குவது குறித்து முடிவு எடுக்க வேண்டிய அதிகாரம் கோர்ட்டுக்கு வழங்கப்படுகிறது.
தீவிரவாத வழக்குகளில் விசாரணை முடிவதற்கு கால தாதம் ஏற்படும் என்பதால் ஜாமீன் வழங்காமல் காவலில் வைக்கும் காலம் 90 நாட்களிலிருந்து அதிகபட்சமாக 180 நாட்கள் வரை அதிகரிக்கப்படுகிறது.
விசாரணையின் தன்மைக்கு ஏற்ப ஜாமீன் வழங்குவது பற்றியும், அல்லது முகாந்திரம் இல்லை என்று தெரிய வந்தால் குற்றம் சாட்டப்பட்டவரை விடுவிக்கும் அதிகாரமும் நீதிபதிக்கு அளிக்கப்படுகிறது.
அதே நேரத்தில் போலீஸ் தரப்பு வாதத்தைக் கேட்காமல் இதில் கோர்ட் முடிவு எடுக்க முடியாது. குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக உறுதியான சாட்சியங்கள் இருந்தால், அவர் குற்றவாளி என்று கோர்ட் முடிவு செய்யலாம். தேசிய புலனாய்வு ஏஜென்சியின் சிறப்பு கோர்ட்டுகளுக்கு இந்த விதிமுறைகள் பொருந்தும்.
இத்தகைய விதிமுறைகள் முன்பு இல்லாததால்தான் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பலர் தப்பி விட்டனர்.
புதிய சட்டத்தின் கீழ் போலீஸ் விசாரணை தொடங்குவதற்கு முன்பு அடிப்படை உரிமைகளுக்குப் பாதிப்பு வராதபடி பார்த்துக் கொள்ளப்படும். மத்திய அரசின் உரிய அதிகார அமைப்பின் அனுமதியை பெற்ற பிறகுதான் விசாரணை தொடங்க அனுமதிக்கப்படும். சிறப்பு கோர்ட் நீதிபதி ஓய்வு பெற்று விட்டாலும் விசாரணை பாதிக்காமல் பார்த்துக் கொள்ளப்படும்.
இதில் மாற்றம் ஏதேனும் என்று விரும்பினால், மீண்டும் பிப்ரவரியில் நாடாளுமன்றம் கூடும்போது உரிய திருத்தங்கள் செய்து கொள்ளலாம் என்றார் சிதம்பரம்.
இதையடுத்து இரு மசோதாக்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து ராஜ்யசபாவிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பின்னர் குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டவுடன் இவை சட்டமாகும்.












Click it and Unblock the Notifications