பெண் ரெளடி கொலையில் 2 தம்பிகள் கைது

அடிதடி, கட்டப் பஞ்சாயத்து, கொலை முயற்சி என ஏகப்பட்ட வழக்குகளைக் கொண்ட பெண் தாதா' பரமேஸ்வரி நேற்று முன் தினம் இரவு கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் அவரது தம்பிகள் செல்வராஜ் (30), தம்பித்துரை (28) மற்றும் கூலிப் படையை சேர்ந்த காமராஜ் (20), கோபி (26) ஆகியோரை இன்று காலை கைது செய்தனர்.
செல்வராஜ், தம்பித்துரை ஆகியோர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில்,
பரமேஸ்வரிக்காக பல முறை நாங்கள் ஜெயிலுக்கு சென்று வந்துள்ளோம். அவர் கை காட்டிய இடத்தில் எல்லாம் அடிதடியில் இறங்கியுள்ளோம்.
அவருக்கு சொந்தமாக 10 ஓர்க் ஷாப்புகள் உள்ளன. இங்குள்ள லாரி செட்களில் லோடு இறக்குவதற்கு என்று நூற்றுக்கணக்கில் ஆட்களை அனுப்புவார். அவர்களிடம் இருந்து தினந்தோறும் ஏராளமான பணம் மாமூலாக பெறுவார். யாராவது பணம் தர மறுத்தால் அவர்களை அடித்து உதைப்பார். தினமும் குடித்து விட்டு எங்களுடன் ரகளை செய்வார்.
அவருக்கு வருமானம் பல வகையிலும் பெருகியது. ஆனால், எங்களுக்கு சரியாக பணம் தருவதி்ல்லை. தனது மகன் தன்ராஜுக்கே எல்லா பணத்தையும் தந்து வந்தார்.
லாரி செட்டுக்கு வேலைக்கு செல்லும் ஆட்களிடம் பெறும் மாமூல் பணத்தில் பங்கு கேட்டோம். இதற்காக எங்களையே ஆள் வைத்து அடித்து உதைத்தார். கொலை செய்து விடுவேன் என மிரட்டினார்.
பரமேஸ்வரி முந்தி கொண்டு எங்களை கொல்வதற்குள் அவரை தீர்த்துக் கட்டிவிட்டோம். காமராஜ், கோபி ஆகிய 2 பேரையும் துணைத்து வைத்துக் கொண்டு பரமேஸ்வரியை கொலை செய்தோம்.
இதற்காக அவர்களுக்கு ரூ.2,000 கூலி பேசினோம். சம்பவத்தன்று இரவு பரமேஸ்வரி மது அருந்திவிட்டு போதையில் கிடந்தார்.
அதிகாலையில் கோபியும், காமராஜூம் தலையணையால் பரமேஸ்வரியின் முகத்தில் அமுக்கி மூச்சு திணறலை ஏற்படுத்தினர். நாங்கள் 2 பேரும் கத்தியால் அவரது கழுத்தை அறுத்தோம்.
பின்னர் ஒன்றும் தெரியாதவர்கள் போல அருகிலேயே படுத்து கொண்டோம். காலையில் அவரது உடலை மருத்துவமனைக்குக் எடுத்து செல்லும் வரை அங்கேயே இருந்தோம் என்றனர்.
4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications