சவூதியில் இந்திய நர்சுகள் 8 பேருக்கு கொலை மிரட்டல்
துபாய்: ஜெட்டாவில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வரும் 8 இந்திய நர்சுகள் மற்றும் ஒரு லேப் டெக்னீஷியன் ஆகியோர், தாங்கள் வேலை பார்த்து வரும் மருத்துவமனை நிர்வாகம் பல்வேறு வகையில் மிரட்டுவதாக கூறியுள்ளனர்.
இந்தியாவைச் சேர்ந்த அன்னா வர்கீஸ், ஐவி, நீத்து ஆன்டன், ஸ்வப்னா, சுமி சோஜன், சந்தியா மோள், கிளாரா தாமஸ், ஷபீனா அப்துல்காதீர், மினி கருணாகரன் ஆகியோர் ஜெட்டாவில் உள்ள டாக்டர் சித்திக் மருத்துவமனையில் நர்சுகளாகவும், லேப் டெக்னீஷியனாகவும் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து உள்ளூர் தொழிலாளர் நீதிமன்றத்தை அனைவரும் அணுகினர்.
இந்த வழக்கை கடந்த ஏப்ரல் மாதம் விசாரித்த நீதிமன்றம், 9 பேருக்கும் பாக்கி சம்பளத்தை வழங்கி, அவர்களுக்கு இந்தியா திரும்புவதற்கான ரிட்டர்ன் டிக்கெட் மற்றும் இறுதி விசாவை வழங்குமாறு மருத்துவமனைக்கு உத்தரவிட்டது.
ஆனால் இந்த உத்தரவை அந்த மருத்துவமனை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டு விட்டது.
இந்த நிலையில் அராப் நியூஸ் இதழுக்கு 9 பேரும் ஒரு அவசர செய்தியை அனுப்பியுள்ளனர். அதில் தாங்கள் பட்டு வரும் சிரமத்தை விவரித்துள்ளனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது ..
எங்களது வாழ்க்கை மற்றும் தொழிலை சீர்குலைக்க மருத்துவமனை நிர்வாகம் பல வழிகளிலும் முயன்று வருகிறது.
நாங்கள் மிகுந்த சிரமத்தில் சிக்கியுள்ளோம். கையில் காசு இல்லாததால் கடைகளில் கடனுக்கு பொருட்களை வாங்கியுள்ளோம். அவர்கள் எல்லாம் தற்போது பணத்தைக் கேட்டு நெருக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் கொடுக்க எங்களிடம் பணம் இல்லை.
நாங்கள் என்ன இந்த மருத்துவமனையின் கொத்தடிமைகளா அல்லது குற்றவாளிகளா?. எங்களுக்கு ஏன் இந்த தண்டனை?. தயவு செய்து எங்களது நிலையை உங்களது பத்திரிக்கையில் வெளியிடுமாறு 9 பேரும் கோரியுள்ளனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையிடம் அராப் நியூஸ் நாளிதழ் விசாரித்தபோது, மருத்துவமனை போர்டு உறுப்பினரான டாக்டர் பெளசியா பாஷா பதிலளிக்கையில், தொழிலாளர் நீதிமன்றம் பரிந்துரைத்த சுமூக உடன்பாட்டில் பலவற்றை நிறைவேற்றி விட்டோம். சில விஷயங்கள் மட்டும் இன்னும் செட்டில் செய்யப்படாமல் உள்ளது. அவையும் விரைவில் முடித்து விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
கோர்ட் உத்தரவை மதிக்காமல் உள்ள இந்த மருத்துவமனையின் வங்கிக் கணக்குகளை முடக்க தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சவூதியைச் சேர்ந்த தொழிலாளர் விவகாரம் தொடர்பான வழக்கறிஞர் தாரிக் அல் இப்ராகிம் கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications