கர்கரே மரணம் குறித்த அந்துலேவின் கருத்து: பிரதமர், சோனியா அதிருப்தி
மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவு தலைவர் ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்டது குறித்து அந்துலே தெரிவித்த கருத்தால் பாஜக உள்ளிட்ட கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. அதேசமயம், காங்கிரஸ் கட்சிக்குள்ளும் அந்துலேவின் பேச்சுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், அந்துலேவின் பேச்சு தேவையற்றது, பாகிஸ்தானுக்கு சாதகமான அம்சமாக இது அமைந்து விடும். வழக்கை பாகிஸ்தான் திசை திருப்ப இதை பயன்படுத்தக் கூடும் என்று கருதுகிறார்களாம்.
அந்துலேவை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர்கள் பலர் சோனியா காந்தியை வலியுறுத்தியுள்ளனர். ஆனால் இந்த நேரத்தில் அவ்வாறு செய்வது சரியாக இருக்காது. மேலும், அந்துலே மூத்த தலைவர் என்று அவர்களை சோனியா சமாதானப்படுத்தினாராம்.
இந்த நிலையில் நேற்று பிரதமரையும், சோனியாவையும் அந்துலே சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது தனது பேச்சுக்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதை அந்துலே மறுத்துள்ளார். நான் யாரிடமும் மன்னிப்பு கேட்கவில்லை என்று அவர் விளக்கியுள்ளார்.
இதற்கிடையே, அந்துலேவின் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்து மத்திய அரசு நாடாளுமன்றத்தில் பதிலளிக்கவுள்ளது. வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று அல்லது நாளை இந்தப் பதிலை தாக்கல் செய்வார் என்று தெரிகிறது.
ஆனால் அதற்கு முன்பு, அந்துலேவே முன்வந்து தனது பேச்சை மறுக்க வேண்டும் என அவருக்கு மேலிடம் நிர்ப்பந்தம் கொடுத்து வருகிறதாம்.