மும்பை எதிரொலி: பிரதீபா பாட்டீலின் பிறந்த நாள் ரத்து
டெல்லி: மும்பை தாக்குதல் சம்பவம் எதிரொலியாக குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களை ரத்து செய்துள்ளார். அதற்குப் பதிலாக அனாதை இல்லங்களுக்கு அவர் பழம், காய்கறிகளை அனுப்புகிறார்.
குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு இன்று 74வது பிறந்த நாளாகும். ஆனால் மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து தனது பிறந்த நாளை கொண்டாடுவதில்லை என்று பிரதீபா பாட்டீல் முடிவு செய்துள்ளார்.
அதற்குப் பதிலாக குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள தோட்டத்தில் விளையும் பழங்கள், காய்கறிகளை பத்து அனாதை இல்லங்களுக்கு அவர் அனுப்பி வைக்கிறார் என்று குடியரசுத் தலைவர் மாளிகை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
முன்னதாக ஆறு நாட்டு தூதர்கள் பொறுப்பேற்பு குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடந்தது. இதில் பேசிய பிரதீபா பாட்டீல், தீவிரவாதிகளுக்கு தொடர்ந்து பாதுகாப்பு கிடைத்து வருகிறது. அவர்களுக்கு பயிற்சியும், ஆதரவும் தங்கு தடையின்றி கிடைத்து வருகிறது. தொடர்ந்து நடைபெறும் தீவிரவாத சம்பவங்கள் இதை நிரூபிக்கின்றன.
அனைத்து நாடுகளும் தீவிரவாதத்திற்கும், தீவிரவாதிகளுக்கும் எதிராக கடுமையாக செயல்பட வேண்டும். அவர்களுக்கு உறுதியான எச்சரிக்கையை அனுப்ப வேண்டும். எந்தப் பகுதியிலிருந்தும் அவர்களுக்கு ஆதரவு கிடைக்காது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றார் பாட்டீல்.












Click it and Unblock the Notifications