வேட்பாளர் தேர்வு: அழகிரி அதிருப்தி-ஸ்டாலின், மாறன் சகோதரர்கள் சமாதானம்

அவர் பரிந்துரை செய்த எஸ்ஸார் கோபியை வேட்பாளராக நிறுத்தாததால் இன்னும் தேர்தல் பணிகளில் அழகிரி ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.
பொள்ளாச்சி அருகே உள்ள டாப் ஸ்லிப்பில் ஓய்வெடுத்து வந்த அழகிரி, வேட்பாளர் லதா அதியமானை சந்திக்கக் கூட இல்லை. தேர்தல் பிரச்சாரப் பணிகளை ஒருங்கிணைக்க அழகிரி தலைமையில் தான் குழுவே அமைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் விலகி நிற்பது திமுகவை அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.
மேலும் விரைவில் திமுகவில் மாபெரும் அளவில் நிர்வாகிகளும் மாற்றப்படவுள்ளனர். ஸ்டாலினுக்கு பொதுச் செயலாளர் பதவி அல்லது துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என்ற பேச்சும் உள்ளது. ஸ்டாலின் பொதுச் செயலாளர் ஆனால், அந்தப் பதவியில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கட்சியின் துணைத் தலைவர் என்ற புதிய பதவியில் அமர்த்தப்படலாம் என்கிறார்கள். இதற்காக அந்தப் பதவி புதிதாக உருவாக்கப்படும்.
அந்த நிலையில் இதுவரை எந்தப் பதவியையும் அனுபவிக்காத தனக்கும் முக்கியமான பதவி தரப்பட்டாக வேண்டும் என அழகிரியும் தலைமையை நெருக்கி வருகிறார்.
இதையடுத்து நிர்வாகிகள் மாற்றத்தை இடைத் தேர்தல் முடிந்த பின் செய்ய திமுக தலைவரும் முதல்வருமான கருணாநிதி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால், பதவி விஷயத்தில் தனக்கு ஏதாவது உறுதிமொழி தரப்பட்டால் தவிர தேர்தல் பணிகளில் அழகிரி இறங்க மாட்டார் என்று கூறப்படுகிறது.
தான் சொன்ன வேட்பாளரான எஸ்ஸார் கோபியை ஒதுக்கிவிட்டு லதாவை வேட்பாளராக்கியதில் இருந்தே தனக்கு கட்சியில் முக்கியத்துவம் தரப்படுவதில்லை என்று அழகிரி கோபப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மக்களவைத் தேர்தலுக்கு அச்சாரம் எனக் கருதப்படும் இந்த இடைத் தேர்தலை திமுக அழகிரியை நம்பியே சந்திக்கும் நிலையில் அவர் தேர்தல் பணியில் இறங்காதது கட்சியை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இதையடுத்து அவரை சமாதானப்படுத்த அமைச்சர் ஸ்டாலின் மதுரை விரைந்தார். அவருடன் மாறன் சகோதரர்களும் சென்றனர். இதையடுத்து பொள்ளாச்சியிலிருந்து மதுரை திரும்பிய அழகிரி மூவரையும் சந்தித்துப் பேசினார்.
அழகிரியை மூவரும் சமாதானப்படுத்திவிட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து இடைத் தேர்தல் பணிகளை தான் பார்த்துக் கொள்வதாகவும், இந்த விஷயத்தில் யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும் அழகிரி உறுதியளித்தார்.
இதைத் தொடர்ந்து ஸ்டாலின் மற்றும் மாறன் சகோதரர்கள் இன்று சென்னை திரும்பினர்.
இதற்கிடையே முதல்வர் உத்தரவுப்படி மூத்த தலைவர்களான அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் ஆகியோர் நிர்வாகிகள் மாற்றம் தொடர்பான உயர் மட்ட ஆலோசனைகளை நடத்தி வருகின்றனர்.
வரும் 27ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்படவுள்ள புதிய நிர்வாகிகள் பட்டியலில் அழகிரிக்கும் முக்கிய பொறுப்பு தரப்படும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications