பாலியல் தொல்லை-தந்தை மீது மகள் புகார்
சென்னை: பெற்ற தந்தையே தன்னிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முயல்வதாக அவரது மகள் சென்னை புறநகர் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை பூந்தமல்லி அருகே உள்ள காட்டுப்பாக்கம், பால்வாடி முதல் தெருவில் வசித்து வருபவர் ஜெயக்குமாரி. 25 வயதாகும் ஜெயக்குமாரி, சென்னை புறநகர் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார்.
அதில், எனது தந்தை பெயர் பன்னீர் செல்வம். எனது தாயார் 3 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். எனது சகோதரிக்கு செப்டம்பர் மாதம் திருமணமாகியது.
நான், எனது தந்தையுடன் தங்கியுள்ளேன். கடந்த 3 மாதங்களாக என்னிடம் எனது தந்தை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முயல்கிறார்.
எனது தந்தை தினசரி குடித்து விட்டு வந்து குடிபோதையில் என்னிடம் தவறாக நடக்க முயல்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த நான் எனது தந்தையிடமிருந்து தப்பிக்க வீட்டுக்கு வெளியே தெருவில் படுத்துத் தூங்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்.
அக்கம் பக்கம் வசிப்போரிடம் எனது நிலையைக் கூறி உதவுமாறு கேட்டுக் கொண்டும் யாரும் உதவி செய்ய முன்வரவில்லை.
இதையடுத்து வேறு வழியில்லாமல் போலீஸை நாடியுள்ளேன். பெற்ற மகளிடமே இப்படி நடந்து கொள்ளும் எனது தந்தை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் ஜெயக்குமாரி கோரியிருந்தார்.
இந்தப் புகாரை பூந்தமல்லி காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்த ஆணையர் அலுவலகம், மனு மீது விரைவான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து பூந்தமல்லி போலீஸார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.
பெற்ற தந்தையே தன்னிடம் தவறாக நடப்பதாக மகள் புகார் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.