ஒரிசா: சங் பரிவாரின் கிறிஸ்துமஸ் பந்த் வாபஸ்
புவனேஸ்வர்: கிறிஸ்துமஸ் தினத்தின்போது ஒரிசாவில் நடத்தப் போவதாக அறிவித்திருந்த பந்த்தை, சங் பரி்வார் அமைப்புகள் விலக்கிக் கொண்டுள்ளன.
முதல்வர் நவீன் பட்னாயக்கை, பாஜக தலைவர்களுடன் சேர்ந்து சுவாமி லட்சுமானந்த் சரஸ்வதி ஷ்ரத்தாஞ்சலி சமிதி அமைப்பின் நிர்வாகிகள் இணைந்து சந்தித்த பின்னர் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சுவாமி லட்சுமாணந்த் சரஸ்வதி சுவாமிகளைக் கொன்றவர்களைக் கண்டுபிடித்துக் கைது செய்யக் கோரி கிறிஸ்துமஸ் தினத்தின்போது பந்த் நடத்த முன்னதாக சங் பரி்வார் அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன.
இதனால் ஒரிசாவில் மீண்டும் வன்முறை மூளும் அபாயம் எழுந்தது. இதையடுத்து இந்தப் போராட்டத்தை வாபஸ் பெறுமாறு கோரி முதல்வர் நவீன் பட்னாயக், லட்சுமாணந்த் சமிதிக்கு கடிதம் எழுதினார்.
கொலையாளிகளைப் பிடிக்க அரசு உரிய நடவடிக்கைளை மேற்கொண்டிருப்பதாக அதில் அவர் சுட்டியிருந்தார்.
இதைத் தொடர்ந்து பாஜக தலைவர்களுடன் இணைந்து சமிதி தலைவர்கள் முதல்வரை நேரில் சந்தித்து கொலையாளிகளை பிடிக்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்த கோரினர். பின்னர் பந்த் அறிவிப்பை வாபஸ் பெற்றனர்.
இந்த அறிவிப்பை கிறிஸ்தவ அமைப்புகள் பல வரவேற்றுள்ளன.