இடைத் தேர்தலில் ராதிகா போட்டியில்லை?
மதுரை: திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தலில் தனித்து போட்டியிடும் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தனது வேட்பாளரை நாளை அறிவிக்கிறது.
இது குறித்து கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருமங்கலம் இடைத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 12 பேர் கடிதம் கொடுத்துள்ளனர். வேட்பாளர் யார் என்பது பற்றி நாளை (21ம் தேதி) நெல்லையில் நடைபெறும் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் சரத்குமார், அறிவிப்பார்.
புதிதாக எங்கள் கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதால், சின்னம் ஒதுக்கிய பிறகு வரும் 26ம் தேதி முதல் தலைவர் சரத்குமார், ராதிகா சரத்குமார் ஆகியோர் தொகுதி முழுவதும் வீடு, வீடாக சென்று பிரசாரம் செய்வார்கள்.
பிரசாரம் மற்றும் உயர்மட்ட பணிக்குழுக்களுக்கு தனித்தனியே கமிட்டி அமைக்க ஏற்பாடு செய்துள்ளோம்.
பெண் வாக்காளர்கள் அனைவருக்கும் ராதிகா மிகவும் அறிமுகமானவர். பெண்கள் ஆதரவு எங்களுக்கு அதிக அளவில் கிடைக்கும்.
திமுக, அதிமுக, தேமுதிக கட்சிகளைவிட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறும்.
நடிகர், நடிகைகளை பிரச்சாரத்திற்கு அழைப்பது குறித்து தலைவர்தான் முடிவு செய்வார் என்றார்.
இங்கு ராதிகா போட்டியிடுவாரா என்று கேட்டதற்கு, சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளர் ஆண் வேட்பாளராகத்தான் இருப்பார் என்று பதிலளித்தார். இதனால் ராதிகா போட்டியிட மாட்டார் என்று தெரிகிறது.