புஷ் மீது ஷூ-கருணை கோரும் முன்டாஸர்
அல் மாலிக்கியும், புஷ்ஷும் கலந்து கொண்ட பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது அதிரடியாக ஷூக்களை வீசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் முன்டாஸர்.
உடனடியாக அவரை மடக்கிய பாதுகாப்புப் படையினர் கைது செய்து அங்கிருந்து கொண்டு சென்று விட்டனர்.
இந்த சம்பவம் உலக நாடுகளை அதிர வைத்த வைத்த நிலையில், அரபு நாடுளின் ஹீரோ ஆகி விட்டார் முன்டாஸர். அவருக்கு பல்வேறு பரிசுகளைக் குவித்துக் கொண்டுள்ளனர் அரபு நாட்டினர்.
லிபிய அதிபர் முகம்மது கடாபியின் மகளோ, முன்டாஸருக்கு மாவீரன் பட்டம் கொடுத்துள்ளார். அவர் விடுதலையானதும் தனது நாட்டுக்கு வரவழைத்து கெளரவிக்கப் போவதாகவும் கூறியுள்ளார்.
ஆனால் தற்போது தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார் முன்டாஸர். அது அசிங்கமான செயல் என்று ஷூ வீசியதைக் குறிப்பிட்டுள்ள அவர் தனக்கு பரிவு காட்டுமாறும் ஈராக் பிரதமர் மாலிக்கிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதை உறுதிப்படுத்திய ஈராக் அரசு செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பிரதமர் நூரி அல் மாலிக்கிக்கு முன்டாஸர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அன்று நடந்த செயல் மிகவும் அசிங்கமானது. தன் மீது பரிவு காட்ட வேண்டும். அனுதாபத்துடன் தன்னை நடத்த வேண்டும் என கோரியுள்ளார் என்றார்.
முன்டாஸரை விடுவிக்க வேண்டும் என அரபு நாடுகள் கோரி வரும் நிலையில், தற்போது முன்டாஸரே தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளதால், அவரை விடுவிக்க ஈராக் அரசு நடவடிக்கை எடுக்கலாம் எனத் தெரிகிறது.