கஸாப் கைதா? பாகிஸ்தானுக்கு நேபாளம் கடும் கண்டனம்
காத்மாண்டு: மும்பையில் சிக்கியுள்ள தீவிரவாதி அஜ்மல் கஸாப், நேபாளத்தில் கைது செய்யப்பட்டதாக பாகிஸ்தான் கூறுவது அபத்தமானது, எங்களது நாட்டின் பெயரைக் கெடுக்கும் முயற்சி இது என்று நேபாள அரசு கூறியுள்ளது.
அஜ்மல் கஸாப் 2 ஆண்டுகளுக்கு முன்பு நேபாளத்தில் கைது செய்யப்பட்டதாக பாகிஸ்தானின் தி நியூஸ் நாளிதழில் சமீபத்தில் செய்தி வெளியானது.
வேலை தேடி கஸாப் நேபாளத்திற்குப் போனதாகவும், ஆனால் அவரை தீவிரவாதி என்று முத்திரை குத்தி அவர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பாகிஸ்தானியரை இந்திய உளவுப் பிரிவின் உதவியுடன் நேபாளப் படைகள் பிடித்ததாகவும் அந்த நாளிதழுக்கு பரூக்கி என்ற வக்கீல் பேட்டி அளித்திருந்தார்.
இந்த செய்திக்கு நேபாள வெளியுறவு அமைச்சகம் மறுப்பும், கடும் கண்டனமும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அது வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தானின் தி நியூஸ் நாளிதழில் வெளியான இந்த செய்தி அரசின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
அதில் லாகூரைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் கூறியிருந்ததைப் போல எந்த சம்பவமும் நேபாளத்தில் நடக்கவில்லை.
தி நியூஸ் இதழில் வெளியாகியுள்ள செய்தி கற்பனையானது, அடிப்படையற்றது, புனைசுருட்டாகும். நேபாளத்தின் பெயரைக் கெடுக்கும் நோக்கத்தில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நேபாள அரசு கடுமையாக மறுக்கிறது. அஜ்மல் கஸாப், நேபாளத்தில் கைது செய்யப்படவும் இல்லை. எந்த நாட்டிடமும் ஒப்படைக்கப்படவும் இல்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், கஸாப் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டது தொடர்பாக தான் நேபாள சுப்ரீம் கோர்ட்டில் வழக்குப் பதிவு செய்திருந்ததாகவும், அது இன்னும் நிலுவையில் இருப்பதாகவும் பரூக்கி கூறியிருந்தார்.
இதை நேபாள நாட்டு சட்டத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர். பரூக்கி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது உண்மைதான். ஆனால் கஸாப்பை விடுவிக்க கோரி அல்ல, வேறு இரு பாகிஸ்தானியர்கள் தொடர்பாகத்தான் அவர் வழக்குப் பதிவு செய்தார். ஆனால் தொடர்ந்து அவர் வழக்கை நடத்தாதால், அவரது மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது என சட்டத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.