முதலில் தடை செய்யப்பட வேண்டியவர் ஜெ தான்-திமுக

திருமங்கலம் சட்டசபை இடைத் தேர்தலில் மு.க.அழகிரிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி அதிமுக சார்பில் தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டது.
அதில், அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 1,405 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் மீதான வழக்குகள் இன்னமும் நிலுவையில் உள்ளது. தற்போது இடைத்தேர்தல் நடக்க உள்ள திருமங்கலம் தொகுதியில் இந்த கைதிகள் வன்முறை நடத்தப்படலாம்.
குற்றப் பின்னணி உள்ளவர்களை தேர்தல் பணியில் ஈடுபட தடை விதிக்க வேண்டும். மு.க. அழகிரி தேர்தல் பணியில் ஈடுபட அனுமதிக்கக் கூடாது என்று அந்த கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை தலைமை தேர்தல் ஆணையம் ஆய்வுக்கு ஏற்றுக் கொண்டது.
இந் நிலையில் திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ரகுபதி, வேங்கடபதி, ராதிகா செல்வி, எம்பிக்கள் குப்புசாமி, கிருஷ்ணசாமி, பழனிச்சாமி, சுகவனம், ஜின்னா ஆகியோர் இன்று தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால்சாமியை சந்தித்து 11 பக்க மனு அளித்தனர்.
அதில், அண்ணா நூற்றாண்டு விழாவின் போது, கைதிகள் விடுவிக்கப்பட்டதில் எந்த தவறும் நடக்கவில்லை. அரசியல் சட்டப்பிரிவு 432வது பிரிவின் கீழ்தான் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இது மாநில அரசுக்குட்பட்ட அதிகாரமாகும்.
மதுரை திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தலை நடத்தும் முடிவை தலைமை தேர்தல் கமிஷன்தான் எடுத்தது. இந்த தேர்தல் நடத்தப்படுவதற்கும், கைதிகள் விடுவிக்கப்பட்டதற்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே திருமங்கலம் தொகுதியில் கைதிகள் வன்முறையில் ஈடுபடுவார்கள் என்பதை ஏற்கக்கூடாது.
கைதிகள் விடுதலை தொடர்பாக ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. அந்த நகலை வைத்து தற்போது தேர்தல் கமிஷனிடம் தவறான தகவல்களை அதிமுக கொடுத்துள்ளது.
அதிமுக கொடுத்துள்ள அடிப்படை ஆதாரமற்ற அந்த மனுவை தலைமை தேர்தல் கமிஷன் தள்ளுபடி செய்ய வேண்டும்.
மு.க. அழகிரி திருமங்கலம் தேர்தல் பணி செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும் அதிமுக மனுவில் கூறப்பட்டுள்ளது. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் யாருக்கும் தேர்தல் பணியில் ஈடுபடலாம். அதை தடுக்க இயலாது.
குற்றப் பின்னணி இருப்பவர்களை தேர்தல் வேலை செய்ய விடக்கூடாது என்று அதிமுக மனுவில் கூறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பார்த்தால் ஜெயலலிதாவைத் தான் முதல் நபராக பிரசாரம் செய்ய விடாமல் தடை செய்ய வேண்டும். அவர் மீது ஊழல் உள்பட பல்வேறு புகார்கள் உள்ளன.
இவ்வாறு திமுக அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications