தங்கபாலு, இளங்கோவன் படங்களுக்கு செருப்பு மாலை-எரிப்பு: 17 பேர் கைது
ஈரோட்டு பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இயக்குநர் சீமான் ஆகியோரை விடுவிக்கக் கோரி தஞ்சை செங்கிப்பட்டியில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கட்சியின் தஞ்சை நகர செயலாளர் இராசு. முனியாண்டி தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது ஈழத் தமிழாகளின் உரிமைக்காக குரல் கொடுக்கும் தலைவர்களை தொடர்ந்து கொச்சைப்படுத்தி வருவதாகக் கூறி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு மற்றும் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோரின் படங்களுக்கு செருப்பு மாலையிட்டு ஊர்வலமாகக் கொண்டு வந்து தீ வைத்து எரித்தனர்.
இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை முதலில் போலீசார் கைது செய்தனர்.
ஆர்ப்பாட்டம் முடிந்த பின் காவல்துறையினர் தாங்கள் பதிவு செய்த புகைப்படங்களை வைத்து அதில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க செங்கிப்பட்டி கிராமம் முழுக்க தேடுதல் வேட்டை நடத்தினர். வீடு வீடாகப் புகுந்து 17 பேரை கைது செய்து கொண்டு சென்றனர்.













Click it and Unblock the Notifications