போதையில் விமானி-தப்பிய பயணிகள்
லண்டன்: லண்டனிலிருந்து மும்பை வரவிருந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தை செலுத்துவதாக இருந்த விமானி, குடிபோதையில் இருந்தது கடைசி நிமிடத்தில் தெரிய வந்து அவர் கைது செய்யப்பட்டார். அதிர்ஷ்டவசமாக விமானமும், பயணிகளும் பேராபத்திலிருந்து தப்பினர்.
ஜெட் ஏர்வேஸுக்குச் சொந்தமான அந்த போயிங் 777 ரக விமானம் பயணிகளுடன், ஹீத்ரூ விமான நிலையத்தில் கிளம்பத் தயாராக இருந்தது. விமானத்தை 62 வயதாகும் மைக்கேல் ஹார் என்பவர் ஓட்டுவதாக இருந்தார்.
இவர் அமெரிக்க கடற்படையில் விமானியாகப் பணியாற்றியவர்.
விமானம் கிளம்புவதற்கு முன்பு விமான நிறுவன ஊழியர்கள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, விமானத்தின் காக்பிட்டுக்குள்ளிருந்து மது வாடை வந்ததையடுத்து உள்ளே வந்து பார்த்தபோது, விமானி ஹார் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது.
அதிர்ச்சி அடைந்த விமான ஊழியர்கள் ஹாரை வெளியேற்றினர். விமானத்தை விட்டு இறக்கப்பட்ட அவர் ஹீத்ரு விமான நிலைய காவல் நிலையத்திற்குக் கூட்டிச் செல்லப்பட்டார். அங்கு அவரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர் பிப்ரவரி மாதம் வரை ஜாமீனில் விடப்பட்டார்.
தாங்கள் பயணிக்கவிருந்த விமானத்தின் விமானி நல்ல குடிபோதையில் இருந்த தகவலைத் தொடர்ந்து பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். ஹார் தொடர்ந்து விமானத்தை செலுத்தியிருந்தால் என்ன கதி ஆகியிருப்போம் என்று பேரதிர்ச்சியில் அவர்கள் சமைந்து போய் விட்டனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வேறு ஒரு விமானியை ஏற்பாடு செய்த ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம், சில நிமிட தாமதத்திற்குப் பின்னர் அந்த விமானத்தை மும்பைக்கு அனுப்பி வைத்தது.
இந்த நிலையில் கடந்த மாதம் மும்பை தீவிரவாதத் தாக்குதலில் சிக்கி உயிரிழந்த, காயமடைந்த சிலரின் உறவினர்களும் பயணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட ஹாரின் வேலைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அவர் ஓய்வு பெற இன்னும் 2 ஆண்டுகள்தான் உள்ளன. ஆனால் அவர் தொடர்ந்து பணியாற்ற ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அனுமதிக்காது என்று தெரிகிறது.
பயணத்திற்கு முந்தைய நாள் இரவில் தனது ஜூனியர் பைலட்டுகளுடன் ஹார் மது அருந்தியுள்ளார். இளைஞர்களுக்கு நிகராக தன்னாலும் மது அருந்த முடியும் என சவால் விட்டு நிறையக் குடித்துள்ளார். அதுவே வினையாகி விட்டது.
விமானிகள், விமான பயணத்திற்கு எட்டு மணி நேரத்திற்கு முன்பாகவே மது அருந்துவதை நிறுத்தி விட வேண்டும் என்று விதி உள்ளது. ஆனால் அதை ஹார் கண்டுகொள்ளவில்லை.
குடி போதையில், பளீரென சிரித்தபடி ஹார் காணப்படும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.
இதேபோலத்தான் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஹீத்ரூ விமான நிலையத்தில், 44 வயதான அமெரிக்க விமானி ஒருவர் குடித்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர் சான்பிரான்சிஸ்கோ விமானத்தை செலுத்தவிருந்தார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விர்ஜின் அட்லான்டிக் விமான நிறுவன விமானி ஒருவர், மியாமிக்கு செல்லவிருந்த விமானத்தை செலுத்துவதற்கு முன்பு குடிபோதையி்ல இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அவரும் இதே ஹீத்ரு விமான நிலையத்தில்தான் பிடிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications