கைதான டாக்டரின் லாக்கரில் ரூ. 66 லட்சம்
சென்னை: லஞ்சம் வாங்கி பிடிபட்ட சென்னை துறைமுக டாக்டரின் வங்கி லாக்கரை சோதனையிட்ட போலீஸார் அதில் ரூ. 66 லட்சம் பணம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
சென்னை துறைமுகத்தில் சுகாதார அதிகாரியாக வேலை பார்த்த டாக்டர் சாய்ராம் பாபு என்பவர் லஞ்ச ஊழல் புகாரில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கோயம்பேட்டில் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம் நடத்தி வருபவர் அலெக்சாண்டர். இவர் பல்வேறு நாடுகளிலிருந்து ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்கிறார்.
கப்பல் மூலம் இந்தப் பழங்கள் சென்னைக்குக் கொண்டு வரப்படுகின்றன. இவற்றை துறைமுகத்தில் உள்ள சுகாதாரத்துறை அதிகாரி சோதனையிட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு உரியவைதான் என்று சான்றிதழ் அளிக்க வேண்டும்.
இந்தப் பொறுப்பில் தான் டாக்டர் சாய்ராம் பாபு உள்ளார். கடந்த 19ம் தேதி வாஷிங்டனிலிருந்து ஆப்பிளை இறக்குமதி செய்துள்ளார் அலெக்சாண்டர். அவற்றுக்கு தரச் சான்றிதழ் வழங்குவதற்கு ரூ. 6000 லஞ்சம் கேட்டார் சாய்ராம். இதையடுத்து சிபிஐ லஞ்ச தடுப்புப் பிரிவில் புகார் கொடுத்தார் அலெக்சாண்டர்.
அதன் பேரில் சாய்ராமை சிபிஐ அதிகாரிகள் மடக்கினர்.
பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரது வீட்டை சிபிஐ அதிகாரிகள் சோதனையிட்டபோது, மூன்று வங்கிகளில் லாக்கர் வைத்திருந்தது தெரியவந்தது.
அவரது வங்கி சேமிப்பு கணக்கில் ரூ.1 கோடியே 4 லட்சம் போடப்பட்டிருந்தது. ரூ.11 லட்சம் சேமிப்பு கணக்கு அவரது மனைவி ரமணி, மகன் கணேஷ், மகள் பிரியங்கா ஆகியோர் பெயரில் இருந்தன. கிஸான் விகாஸ் பத்திரமும் ரூ.4 லட்சத்துக்கு வாங்கப்பட்டது கண்டறியப்பட்டது.
ஜவுளிக்கடை பைகளில் கட்டுக்கட்டாக...:
இதையடுத்து மூன்று வங்கிகளின் லாக்கரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் திறந்து பார்த்தார்கள். லாக்கர்களில் ஜவுளி கடைகளில் துணி வாங்கும்போது தரும் பாலீதின் பைகளில் கட்டுகட்டாக ரொக்க பணம் இருந்தது.
இதைப் பார்த்து சிபிஐ அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவற்றை கைகளால் எண்ண முடியாமல் பணம் எண்ணும் மெஷினை வைத்து எண்ணி முடித்தனர். மொத்தம் ரூ.66 லட்சம் பணம் இருந்தது தெரிய வந்தது.
சாய்ராமிடம் மொத்தம் ரூ.1 கோடியே 85 லட்சம் பணம் வங்கி சேமிப்பு கணக்கு மூலமும், ரொக்கமாகவும் கைப்பற்றப்பட்டதாக சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.
இன்னொரு வங்கி லாக்கரையும் திறந்து பார்க்கவுள்ளனர். அதில் எத்தனை லட்சம் புதைந்து கிடக்கிறதோ தெரியவில்லை.












Click it and Unblock the Notifications