கொல்க்கத்தாவுக்கு பாக். குறி? - அதிகபட்ச உஷார் நிலை

இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பதட்டம் அதிகரித்து வருகிறது. மும்பைத் தாக்குதலுக்குப் பின்னர் இந்தியா, கடும் கோபத்துடன் இருப்பதால் நிச்சயம் தாக்குதல் வரும் என பாகிஸ்தான் அஞ்சுகிறது.
கொல்கத்தாவை நாசப்படுத்த திட்டம்
இந்த நிலையில், இந்தியாவின் முக்கிய நகரங்களில் பெரும் நாச வேலைகளை நிகழ்த்த பாகிஸ்தான் ராணுவமும், ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பும் திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவு அமைப்பு (ஐபி) எச்சரித்துள்ளது.
குறிப்பாக மேற்கு வங்க மாநிலத்தில், தலைநகர் கொல்கத்தா உள்ளிட்ட முக்கிய நகரங்கள் சிலவற்றை பாகிஸ்தான் குறி வைத்திருப்பதாக தெரிகிறது. இந்த நாச வேலைக்கு ஹூஜி அமைப்பை பயன்படுத்தவும் அது திட்டமிட்டுள்ளது.
ஹூஜி தீவிரவாதிகள் ஊடுறுவல்
இந்த முயற்சிக்காக பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற ஹூஜி அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் வங்கதேசத்திலிருந்து, சிலிகுரி வழியாக மேற்கு வங்க மாநிலத்திற்குள் ஊடுறுவ முயன்று வருகின்றனர்.
இவர்களில் சிலர் ஊடுறுவியிருக்கலாம் என்றும் சிலரின் முயற்சிகள் இன்னும் நிறைவேறவில்லை என்றும் ஐபி தெரிவித்துள்ளது.
கே.எல்.ஓ. உதவியுடன் ..
இந்தியாவுக்குள் ஊடுறுவியுள்ள ஹூஜி தீவிரவாதிகள், மேற்கு வங்க மாநிலத்தில் செயல்படும் காம்தாபூர் விடுதலை இயக்கம் (கே.எல்.ஓ.) என்ற உள்ளூர் பிரிவினைவாத இயக்கத்துடன் இணைந்துள்ளனர்.
இரு அமைப்பினரும் சேர்ந்து டிசம்பர் கடைசி அல்லது ஜனவரி முதல் வாரத்தில் நாச வேலைகளில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாக ஐபி எச்சரித்துள்ளது.
அதேபோல வங்கதேசத்திலிருந்து உல்பா தீவிரவாதிகள் குழு ஒன்று அஸ்ஸாம் வழியாக இந்தியாவுக்குள் ஊடுறுவ திட்டமிட்டுள்ளது. இவர்கள் மேகலாயாவில் தற்காலிகமாக முகாமிட்டு பின்னர் மேற்கு வங்க மாநிலத்திற்குள் புகவுள்ளனராம்.
தகவல்களை கக்கிய பாக். சிப்பாய்
இந்தத் தகவல்கள் அனைத்தும் சமீபத்தில் காஷ்மீரில் பிடிபட்ட பாகிஸ்தான் ராணுவ சிப்பாய் உள்ளிட்ட 3 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.இந்த மூன்று பேரும் டாக்காவிலிருந்து காஷ்மீருக்கு வந்துள்ளனர். பெரும் நாச வேலைகளி்ல் ஈடுபடும் திட்டத்துடன் இவர்கள் வந்துள்ளனர்.
வங்கதேசத்தின் வால்தனம்
பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. இப்போது வங்கதேச உளவு அமைப்புடன் இணைந்து தீவிரவாத திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் உளவுத்துறை தெரிவித்துள்ளது.
வங்கதேச உளவு அமைப்பின் உதவியுடன், அஸ்ஸாம், மேற்கு வங்கம், மேகலாயா உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் உள்ள பிரிவினைவாத குழுக்களுடன் ஐ.எஸ்.ஐ டீலிங்குகளை மேற்கொண்டு வருகிறதாம்.
கே.எல்.ஓ எனப்படும் பிரிவினைவாத அமைப்பு 1995ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. உல்பா தீவிரவாத அமைப்பின் உதவியுடன் இது தொடங்கப்பட்டது. மேற்கு வங்க மாநிலம் தெற்கு திஞ்சாபூர், வடக்கு திஞ்சாபூர், கூச்பிகார், ஜல்பைகுரி, மால்டா, டார்ஜீலிங் ஆகிய மாவட்டங்களில் இந்த அமைப்பு அட்டகாசம் செய்து வருகிறது. அதேபோல அஸ்ஸாமின் கீழ் மாவட்டங்களில் இதன் ஆதிக்கம் உள்ளது.
இந்த அமைப்பை ஐஎஸ்ஐ தனது நாச வேலை திட்டங்களுக்குப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது. இதுதவிர தேசிய போடோலேன்ட முன்னணி என்ற தீவிரவாத அமைப்பையும், வங்கதேச உளவு அமைப்பின் உதவியுடன், ஐஎஸ்ஐ தனது திட்டங்களுக்குப் பயன்படுத்தி வருகிறது.
உச்சகட்ட உஷார் நிலை...
உளவுத் துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் மற்றும் மேகாலயா ஆகிய மாநில அரசுகளை அதிகபட்ச உஷார் நிலையில் இருக்குமாறு எச்சரித்துள்ளது.
இதைத் தொடர்ந்து 3 மாநிலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கொல்கத்தா நகரி்ல் அதிகபட்ச உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications