கஸாப்புக்கு தூதரக உதவி கிடையாது - பாக். முடிவு
இஸ்லாமாபாத்: கஸாப் பாகிஸ்தான் குடிமகன் என்பதற்கான ஆதாரம் இல்லாததால், அவனுக்கு தூதரகம் மூலமாக எந்த உதவியையும் செய்வதில்லை என்று முடிவெடுத்துள்ளதாம் பாகிஸ்தான்.
மும்பை தீவிரவாதத் தாக்குதலில் உயிருடன் பிடிபட்டுள்ள ஒரே தீவிரவாதி கஸாப் மட்டுமே. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், பரீத்கோட் கிராமத்தைச் சேர்ந்தவன். இதுதொடர்பான ஆதாரங்கள் முழுமையாக நிரூபிக்கப்பட்டுள்ளன.
ஆனால் பரீத்கோட்டில் கஸாப் என்ற பெயரில் யாருமே கிடையாது. அவன் பாகிஸ்தானியே கிடையாது பாகிஸ்தான் அரசு முழுப் பூசணிக்காயை எடுத்து சோற்றில் புதைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இந்த நிலையில், தனக்கு சட்ட உதவி வழங்கக் கோரி கஸாப், பாகிஸ்தான் அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளான். இந்தக் கடிதத்தை பாகிஸ்தான் தூதரிடம், மத்திய வெளியுறவுத்துறை வழங்கியுள்ளது.
ஆனால் கஸாப் பாகிஸ்தானி குடிமகன் என்பதற்கான ஆதாரம் இல்லை. எனவே அவனுக்கு எந்தவித உதவியையும் வழங்குவதில்லை என்ற முடிவுக்கு பாகிஸ்தான் வந்துள்ளதாம்.
இதுகுறித்து பிரதமர் கிலாயினின் ஆலோசகரான ரஹ்மான் மாலிக் கூறுகையில், அஜ்மல் கஸாப் பாகிஸ்தானி என்பதற்கான ஆதாரமே இல்லை. அது கிடைக்கும் வரை அவனுக்கு தூதரக ரீதியில் எந்த உதவியையும் செய்ய முடியாது. அந்தப் பேச்சுக்கே இடமில்லை.
கஸாப் குறித்து தேசிய டேட்டா பேஸில் எந்த தகவலும் இல்லை. கஸாப் என்ற பெயரில் ஒருவர் கூட இல்லை.
எனவே அவன் பாகிஸ்தானிதான் என்று எங்களால் உறுதியாக கூற முடியாது. அப்படி இருக்கையில், எப்படி அவனுக்கு பாகிஸ்தான் அரசு உதவ முடியும்? என்று கேட்டுள்ளார் மாலிக்.
மாஜிஸ்திரேட்டிடம் கஸாப் வைத்த கோரிக்கை
இதற்கிடையே, நேற்று மும்பை குற்றப் பிரிவு அலுவலகத்தில், தனது காவலை நீட்டிக்க வந்த மாஜிஸ்திரேட்டிடம், பாகிஸ்தான் தூதரகத்தின் உதவி தனக்கு தேவை. தூதரக அதிகாரிகளை சந்திக்க ஏற்பாடு செய்ய உத்தரவிட வேண்டும் என கஸாப் கோரிக்கை வைத்தானாம்.
பாகிஸ்தானின் உதவியை கஸாப் தற்போது 2வது முறையாக கோரியுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications