குமட்டி கீரை சாப்பிட்ட மேலும் ஒரு சிறுமி பலி
ஆலங்குளம்: நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே குமட்டி கீரை என்ற ஒரு வகை கீரையை சாப்பிட்ட மேலும் ஒரு சிறுமி பலியானாள்.
ஆலங்குளம் அருகேயுள்ள கரும்பனூரை சேர்ந்தவர் ராஜேந்திரன். அவருடைய மனைவி மாடத்தி. அவர்களுடைய மகன்கள், முத்துராஜ், செல்வம். அங்குள்ள ஒரு பள்ளியில் செல்வம் 10ம் வகுப்பு படித்து வந்தான்.
சம்பவதன்று மாடத்தி காட்டு பகுதியில் கிடைக்கும் குமட்டி கீரையை பறித்து வந்து அதை சமைத்து தனது மகன்கள், முத்துராஜ், செல்வம், பேத்தி சிவரஞ்சனி ஆகியோருக்கு சாப்பிட கொடுத்தார். அவர்களும் சாப்பிட்டனர்.
மீதி இருந்த கீரையை அவர் சாப்பிட்டார். சாப்பிட்டு விட்டு பள்ளிக்குச் சென்றான் செல்வம். பள்ளியில் தேர்வு எழுதிக் கொண்டிருந்தபோது செல்வத்துக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
உடனே அவனை தென்காசி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே செல்வம் பரிதாபமாக இறந்தான்.
இதேபோல வீட்டில் இருந்த மாடத்தி, முத்துராஜ், பேத்தி சிவரஞ்சனி ஆகியோருக்கும் வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர்களையும் தென்காசி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
சிறுமி சிவரஞ்சினியை மேல்சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன்றி சிறுமி சிவரஞ்சனி பரிதாபமாக இறந்தாள்.
இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications