முதல்வர்களுக்கு ப.சிதம்பரத்தின் 8 கட்டளைகள்-20 நாள் கெடு
டெல்லி: உள்நாட்டு பாதுகாப்பை உறுத் செய்ய 8 அம்ச நடவடிக்கைகளை அமல்படுத்துமாறு அனைத்து மாநில முதல்வர்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கடிதம் எழுதி உள்ளார்.
இந்த நடவடிக்கைகளை 20 நாட்களில் அமல்படுத்துமாறும் அவர் கோரியுள்ளார்.
உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்கள் மாநாட்டை வரும் 6ம் தேதி மத்திய அரசு கூட்டியுள்ளது.
இந் நிலையில் மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, அனைத்து மாநில முதல்வர்களுக்கு ப.சிதம்பரம் கடிதம் எழுதி உள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இளம் மற்றும் துடிப்புமிக்க எஸ்பி அல்லது டிஎஸ்பி அந்தஸ்தில் 24 மணி நேரமும் இயங்கும் காவல்துறை சிறப்பு கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட வேண்டும். அந்தக் கட்டுப்பாட்டு அறை மாநிலத்தின் அனைத்து மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் எஸ்பிக்கள் அலுவலகங்களில் இருந்து வரும் சட்டம்-ஒழுங்கு, வன்முறை, தீவிரவாதம் தொடர்புடைய தகவல்களை சேகரித்து ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக் கொள்ள உதவ வேண்டும்.
மாநில புலனாய்வு அமைப்புகள் தமக்கென தனியாக ஒரு ஆய்வுப் பிரிவை உருவாக்கி, உளவுத் தகவல்களை பிற மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அந்த தகவல்களை மத்திய உளவுத்துறைக்கு உடனுக்குடன் அனுப்பி வைக்க வேண்டும்.
தினமும் காலையில் அந்தந்த மாநில தலைமைச் செயலாளர், காவல்துறை டிஜிபி, உளவுத்துறை இயக்குனர், தலைநகர் போலீஸ் ஆணையர்களுடன் முதல்வர்கள் உள்நாட்டு பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆலோசனை நடத்த வேண்டும்.
மாதம் 2 முறை அல்லது ஒரு முறையாவது கலெக்டர்கள், பிராந்திய ஐஜிக்கள், கண்காணிப்பாளர்களுடன் முதல்வர் ஆய்வுக் கூட்டங்கள் நடத்த வேண்டும்.
குண்டர்கள், கந்து வட்டிக்காரர்கள், கடத்தல்காரர்கள், நில பேர மோசடிப் பேர்வழிகள் உள்ளிட்டோரை அடியோடு ஒழிக்க தேசிய பாதுகாப்பு சட்டம் மற்றும் சட்ட விரோத செயல் தடுப்புச் சட்டங்களை மிகத் தீவிரமாக பயன்படுத்த வேண்டும்.
மாநிலத்தின் முக்கியப் பகுதிகள், அரசு மற்றும் வர்த்தக மையங்கள், நினைவுச் சின்னங்கள், முக்கிய தனியார் அலுவலகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கமாண்டோ படைகளை 24 மணி நேரமும் பாதுகாப்பில் ஈடுபடுத்த வேண்டும்.
கமாண்டோ படையினருக்கு பயிற்சி அளிக்க மாநில அரசுகள் திட்டங்களை வகுத்து அதை மத்திய உள்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
முக்கிய, பெரிய தனியார் நிறுவனங்கள் தங்களது பாதுகாப்பு தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுத்துள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சரான பின் முதல்வர்களுக்கு அவர் கடிதம் அனுப்புவது இதுவே முதல் முறையாகும்.












Click it and Unblock the Notifications