காங். நெருக்கடி-2 வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றம்
சென்னை: காங்கிரஸ் எம்.பி. கார்வேந்தனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது, சத்தியமூர்த்தி பவன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகியவை குறித்த வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்றி அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவங்கள் மற்றும் சோனியா, பிரதமர், காங்கிரஸ் தலைவர்களின் உருவப் பொம்மைகள் எரிக்கப்பட்ட விஷயங்களால் திமுக-காங்கிரஸ் இடையே மோதல் அதிகரித்துள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்தைதயடுத்து விடுதலைச் சிறுத்தைகள், பெரியார் தி.க., தமிழ்த் தேசிய பொதுவுடமைக் கட்சி ஆகியவை போராட்டங்கள்- தாக்குதல்களில் ஈடுபட்டன.
இதற்கு திமுக அரசு கொடுக்கும் இடமே காரணம் என்று கூறி திமுகவுக்கு எதிராக காங்கிரஸார் போராட்டங்களில் குதித்ததையடுத்து உறவில் பிரச்சனை உருவாகியுள்ளது.
இதையடுத்து நிலைமையை சீராக்க சோனியாவின் தூதராக தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பார்வையாளரும் மத்திய அமைச்சருமான வயலார் ரவி சென்னை வந்து முதல்வரை சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் எந்த ஒரு இயக்கமாக இருந்தாலும் காங்கிரஸ் கட்சி அவர்களுடன் எந்தவிதமான தொடர்பும் வைத்துக் கொள்ளாது. இதில் நாங்கள் கவனமாகவும், மிகவும் உறுதியாகவும் உள்ளோம்.
எங்களின் நிலைமையை நாங்கள் முதல்வரிடம் எடுத்துச் சொல்லி விட்டோம். நாங்கள் எங்கள் நிலைமையில் இருந்து ஒருநாளும் பின்வாங்கப் போவதில்லை. விடுதலைப் புலிகளுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அது தடைச்செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கம்.
ஒன்றிரண்டு சிறிய கட்சிகள் காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனை கல்வீசி தாக்கியதின் மூலம் அரசியல் லாபம் அடைந்து விடலாம் என்று கருதினால் அது மிகவும் தவறு. அது அவர்களின் அறியாமையைத்தான் காட்டுகிறது. இதை பைத்தியகாரத்தனம் என்றுதான் சொல்ல வேண்டும் என்றார்.
வழக்குகள் சிபிசிஐடிக்கு மாற்றம்:
முதல்வரை வயலார் ரவி சந்தித்த பின் தமிழக காவல்துறை டிஜிபி கே.பி. ஜெயின் வெளியிட்ட அறிக்கையில்,
சத்தியமூர்த்தி பவன் முன் நடந்த சம்பவம் தொடர்பாக அண்ணாசாலை போலீசார் இ.பி.கோ. 147, 323, 324, 307 ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தாராபுரத்தில் பழனி தொகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான கார்வேந்தனின் வீட்டின் முன் மிரட்டல் துண்டு பிரசுரங்களும், எரிந்த நிலையில் காங்கிரஸ் கொடிகளும் கிடந்தன.
இது தொடர்பாக தாராபுரம் போலீசார் இ.பி.கோ. 285, 506(2), 507 ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த 2 வழக்குகளும் சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்றப்படுகின்றன என்று கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ் நெருக்கடியைத் தொடர்ந்தே நிலைமையை சீராக்க அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications