தமிழீழ விடுதலைக்கு அங்கீகாரம்-விடுதலை சிறுத்தைகள் தீர்மானம்
சென்னை: இந்திய அரசு மற்றும் உலக நாடுகள் தமிழீழ விடுதலைக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விடுதலை சிறுத்தைகள் சார்பில், இளஞ் சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை தொடக்க விழாவும், தமிழீழ அங்கீகார மாநாடும் சென்னையில் நடந்தது.
அமைந்தகரை புல்லா அவென்யூவில் நடந்த இந்த மாநாட்டில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, கவிஞர் காசி ஆனந்தன், திராவிட இயக்க தமிழக பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த மாநாட்டில் இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறையை விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் தொடங்கி வைதார்.
இதையடுத்து மாநாட்டில் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்து திருமாவளவன் வாசித்தார். அதன் விவரம்:
1948ம் ஆண்டு பிரிட்டிஷ்காரர்கள் தமிழீழத்தை விட்டு வெறியேறுகிறபோது தமிழீழத்தின் இறையாண்மை தமிழீழ மக்கள் கையில் ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்த இறையாண்மை இலங்கைத் தீவில் பெரும்பான்மையினராக இருந்த சிங்களர் கையில் ஒப்படைக்கப்பட்டது. தமிழீழத்தின் இறையாண்மை சிங்களவரிடம் இருந்து தமிழர் கையில் ஒப்படைக்க வேண்டும்.
தமிழீழ தேசிய இனத்தின் இறையாண்மையை தமிழர் மீண்டும் பெற தமிழீழ மக்களுக்கு அதன்வழி நிலையான, உறுதியான அமைதி வாழ்வு கிடைக்க, இந்திய அரசு உலக நாடுகளின் அரசுகளும் தமிழீழ விடுதலைக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
பின்னர், எகிறிப்பாய்', கட்டறுந்த புயல்' ஆகிய 2 இசை டிவிடிக்கள் வெளியிடப்பட்டன. அதை ஜி.கே.மணி, சுப.வீரபாண்டியன் ஆகியோர் வெளியிட, கவிஞர் காசி ஆனந்தன், விடுதலை சிறுத்தைகள் எம்எல்ஏ ரவிக்குமார் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
இந்த மாநாட்டுக்கு அனுமதி வழங்கக் கூடாது என காங்கிரஸ் கட்சி அரசிடம் கோரிக்கை விடுத்த நிலையிலும் உயர் நீதிமன்ற உத்தரவின்படி புலிகளுக்கு ஆதரவாகப் பேசக் கூடாது என்ற கடுமையான கட்டுப்பாட்டின் கீழ் இந்த மாநாட்டுக்கு போலீசார் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
புலி ஆதரவு பேச்சுக்களில் ஈடுபட்டு வருவோரால் திமுக-காங்கிரஸ் இடையிலான உறவில் பிரச்சனை தோன்றியுள்ள நிலையில் இந்த மாநாடு நடந்தது. இதில் சிக்கலை ஏற்படுத்தும் வகையிலான பேச்சுக்கள் ஏதும் இடம் பெறவில்லை.












Click it and Unblock the Notifications