தீவிரவாதிகளை ஒழிப்போம், ஆனால் இந்தியா உத்தரவிடக் கூடாது: சர்தாரி
இஸ்லாமாபாத்: தீவிரவாதிகளை ஒழிப்பதில் பாகிஸ்தான் உறுதியாக உள்ளது. ஆனால் அதை இந்தியா சொல்லக் கூடாது. இந்தியா சொல்லித்தான் நாங்கள் செய்ய வேண்டும் என்றில்லை. இந்தியா எங்களுக்கு உத்தரவிட முடியாது என்று பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி கூறியுள்ளார்.
முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் முதலாமாண்டு நினைவு நாள் விழாவில் கலந்து கொண்டு பேசிய சர்தாரி இவ்வாறு தெரிவித்தார்.
அவர் கூறுகையில், பாகிஸ்தானை தீவிரவாத புற்று நோய் பீடித்துள்ளது என்பதை ஒப்புக் கொள்கிறேன். உண்மைதான், தீவிரவாதம் இங்கு உள்ளதுதான். அதை நாங்கள் கண்டிப்பாக சரி செய்து விடுவோம். அதை தீர்ப்போம். தீவிரவாதிகளை ஒழிப்போம்.
பிரச்சினைகளுக்கு தீர்வு போர் அல்ல. பேச்சுவார்த்தைதான் மிகப் பெரிய ஆயுதம்.
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டுக்கும், உலகின் மிகப் பழமையான ஜனநாயக நாட்டுக்கும் (இந்தியா, பாகிஸ்தான்) நான் கூறிக் கொள்ள விரும்புவது என்னவென்றால், தயவு செய்து நாங்கள் சொல்வதை கவனியுங்கள். எங்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள். உங்களுடன் பகிர்ந்து கொள்ள எங்களிடம் நிறைய அனுபவம் உள்ளது. நாங்களும் பலரைப் பறி கொடுத்துள்ளோம். போர் குறித்து நாங்கள் பேசவில்லை, பேச விரும்பவில்லை. பழிவாங்குவது குறித்து நாங்கள் பேச விரும்பவில்லை.
நமது பிராந்தியத்தில் உள்ள சிலர் (இந்தியா) நமது திறமையை சோதித்துப் பார்க்க விரும்புகின்றனர். அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்கிறேன், எங்களது திறமையை பலமுறை நாங்கள் நிரூபித்துள்ளோம். மறுபடியும் அதை சோதிக்க விரும்பாதீர்கள், முயலாதீர்கள்.
எங்களிடமும் சில பலவீனங்கள் உள்ளது என்பதை நான் மறைக்க விரும்பவில்லை. ஆனால் அதிலிருந்து நாங்கள் மீண்டு விடுவோம். எதைச் செய்ய வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். உங்களது (இந்தியா) உத்தரவின்படிதான் நாங்கள் நடக்க வேண்டும் என நினைக்காதீர்கள் என்றார் சர்தாரி.












Click it and Unblock the Notifications