இந்திய, பாக். ராணுவ அதிகாரிகள் ஹாட்லைன் மூலம் பேச்சு

இரு நாட்டு எல்லைப் பகுதியிலும் நிலவும் பாதுகாப்புப் படையினரின் நடமாட்டம் குறித்து இந்தப் பேச்சுவார்த்தையின்போது பேசப்பட்டதாக பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலை பாகிஸ்தான் உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும் விவரங்களை அது தெரிவிக்கவில்லை.
மும்பைத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தக் கூடும் என்ற பரபரப்பு நிலவி வருகிறது. பாகிஸ்தான் தனது எல்லைப் பகுதியில் படைகளைக் குவித்து வருகிறது. இந்தியாவும் பல்வேறு வழிகளில் தயார் நிலையில் இருந்து வருகிறது. இதனால் இரு நாடுகளிலும் போர் பதட்டம் காணப்படுகிறது.
இந்த நிலையில், இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் ஹாட் லைன் மூலம் பேசியிருப்பது திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சனிக்கிழமை நடந்த இந்த ஹாட்லைன் பேச்சு, இரு தரப்பு நிலைகளை தெளிவுபடுத்திக் கொள்வதற்காக நடந்ததாக பாதுகாப்புத்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரு தரப்புமே வழக்கமான பணிகளிலேயே ஈடுபட்டிருப்பதாகவும், படைக் குவிப்பு எதுவும் நடைபெறவில்லை என்பதையும் இந்த பேச்சின்போது இரு நாட்டு ராணுவமும் தெளிவுபடுத்திக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இரு நாட்டு ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர்களுக்கிடையே இந்த ஹாட்லைன் பேச்சு நடந்துள்ளது.
இந்த பேச்சால், இரு நாடுகளின் எல்லைப் பகுதியில் நிலவும் பதட்டம் தணியக் கூடும் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications