இலங்கைக்கு ராணுவ தளம் அமைத்து தரும் சீனா!
நாகர்கோவில்: இலங்கையில், ராணுவ தளம் அமைப்பதற்கு சீனா பல்வேறு வழிகளில் உதவி வருவதாக இலங்கை தமிழ் எம்.பி. சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட தமிழ் அமைப்பு கூட்டமைப்புகள் சார்பில் ஈழத்தமிழர் வாழ்வுரிமை கருத்தரங்கம் நாகர்கோவிலில் நடந்தது.
இதில் கலந்து கொள்வதற்காக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் நாகர்கோவில் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் பேசுகையில், இலங்கையில் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் யுத்தம் நடைபெற்று வருகிறது. புலிகளுக்கு எதிரான யுத்தம் என்று இலங்கை அரசு கூறினாலும் அது ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடக்கும் இன படுகொலை என்று நாங்கள் நாடாளுமன்றத்திலேயே கூறியுள்ளோம்.
வன்னி பகுதியில் 5 லட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள். இவர்களில் 4 லட்சம் பேர் வீடுகளை இழந்து காடுகளில் வசித்து வருகின்றனர். இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளிடம் போரை நிறுத்துமாறு நாங்கள் வலியுறுத்தி வருவதால் விடுதலை புலிகள் வலுவிழந்துவிட்டதாக இலங்கை அரசு கூறி வருகிறது.
சீனா 10 லட்சம் டாலர் செலவில் அம்பத்துக்கோட்டை என்ற பகுதியில் இலங்கைக்கு போர்தளம் அமைத்து கொடுக்கிறது. இத்திட்டம் மூலம் இந்திய கடல் வழியாக வெடிபொருட்களை இலங்கைக்கு கடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதுவரை இந்தியாவிற்கு பக்கவாட்டில் இருந்துதான் பிரச்சனை இருந்து வந்தது. ஆனால் சீனா மூலம் இலங்கைக்கு வெடிபொருட்கள் கடத்தப்படுவதால் இனி இந்தியாவிக்கு கொல்லைபுறமாகவும் ஆபத்து காத்திருக்கிறது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications