வாக்காளர்களுக்கு அதிமுக பணம்-சிடி ஆதாரத்துடன் திமுக புகார்

மதுரையி்ல் தங்கியுள்ள தேர்தல் பார்வையாளர் சுனில் குமார் குஜூரை, திமுக வேட்பாளர் லதா அதியமான், முன்னாள் எம்.பி சண்முக சுந்தரம், திருமங்கலம் தொகுதி திமுக தேர்தல் நிர்வாகிகள் உள்ளிட்டோர் அடங்கிய குழு சந்தித்துப் புகார் மனு கொடுத்தது.
அதில், அதிமுக வேட்பாளர் முத்துராமலிங்கத்திற்கு ஆதரவு திருட்டுவதற்காக தொகுதிக்குள் தேர்தல் அதிகாரியின் அங்கீகாரம் பெறாத 100க்கும் மேற்பட்ட கார்களில் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் 200க்கும் மேற்பட்ட வக்கீல்கள், ரவுடிகள் வந்துள்ளனர்.
தொகுதியில் தேர்தல் விதிகளை மீறி வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்துள்ளனர். திமுக தொண்டர்களையும் மிரட்டியுள்ளனர்.
பச்சக்காவன்பட்டியில் அதிமுக வேட்பாளர் சார்பில் நெல்லையைச் சேர்ந்த வக்கீல் மணிகண்டன் மற்றும் 50க்கும் மேற்பட்டோர், வாக்காளர்களுக்கு ரூ. 7000 பணத்தை கொடுத்துள்ளனர்.
தமிழகம் முழுவதிலுமிருந்து வந்துள்ள அதிமுகவினர், வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தும், ரவுடிகளை வைத்து அச்சறுத்தியும் வாக்கு சேகரிக்கும் வேலையில் இறங்கியுள்ளனர்.
இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது. பின்னர் வக்கீல் சண்முக சுந்தரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுகவினரும், அவர்களது அடியாட்களும் வாக்காளர்களுக்குப் பணப் பட்டுவாடா செய்துள்ளனர். அவர்களை திருமங்கலம் பொதுமக்களும், திமுகவினரும் கையும் களவுமாகப் பிடித்து போலீஸீல் ஒப்படைத்துள்ளனர்.
சிந்துப்பட்டி, செக்கானூரணி, திருமங்கலம் காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதிமுகவினர் தேர்தல் விதிமுறைகளை மீறி நடந்து கொண்டது தொடர்பாக சிடி ஆதாரங்களையும் தேர்தல் பார்வையாளரிடம் கொடுத்துள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications