சென்னையி்ல் விடுதலைப் புலிகள் ஏஜென்ட் கைது
சென்னை: காஞ்சிபுரம் கியூ பிரிவு போலீஸார், சென்னை தாம்பரத்தில், விடுதலைப் புலிகள் இயக்க ஏஜென்ட் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள அகதிகள் முகாமில், விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர் ஒருவரை சமீபத்தி்ல் கியூ பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையி்ல் காஞ்சிபுரம் கியூ பிரிவு போலீஸார், சென்னை விரைந்தனர்.
தாம்பரம் பஸ் நிலையப் பகுதியில் வைத்து அந்தோணி என்பவரைக் கைது செய்தனர். இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். விடுதலைப் புலிகளின் ஏஜென்ட் ஆவார்.
அவர் தங்கியிருந்த வீட்டை சோதனையிட்டபோது, அங்கு 3 சாட்டிலைட் போன்கள், எட்டு ஜிபிஎஸ் கருவிகள், 500 கிலோ அம்மோனியம் நைட்ரேட் ஆகியவை சிக்கின.
போலீஸாரிடம் அந்தோணி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், நான் யாழ்ப்பாணத்தில் வசித்த போது விடுதலைப்புலிகள் இயக்கத்தினரோடு பழக்கம் வைத்திருந்தேன். விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த கண்ணன், பிரகாஷ் ஆகிய இருவரும் எனக்கு நெருங்கிய நண்பர்கள் ஆவார்கள்.
இலங்கையில் போர் உச்சகட்டமாக நடப்பதால், கடந்த மார்ச் மாதம் நானும், எனது மனைவி கலையும் கள்ளத்தோணி மூலம் மண்டபம் அகதிகள் முகாமுக்கு வந்தோம். அங்கிருந்து சென்னை வந்தோம்.
தாம்பரத்தை அடுத்த மாடம்பாக்கத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினோம். 2 கார்களை வாங்கி டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றை நான் தொடங்கினேன். ஒரு காரை நானே ஓட்டுவேன். இன்னொரு காரை டிரைவரை வேலைக்கு வைத்து ஓட்டினேன். பிழைப்பு நன்றாக ஓடியது.
இந் நிலையில் இலங்கையில் வவுனியா பகுதியிலிருந்து விடுதலைப்புலிகள் கண்ணன், பிரகாஷ் இருவரும் என்னிடம் தொடர்பு கொண்டனர்.
சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து ஜான்சன், சுகந்தன் ஆகியோர் சில பொருட்களை விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைப்பார்கள் என்றும், அந்த பொருட்களை வாங்கி ராமேசுவரத்தில் உள்ள ஏஜெண்டு ஒருவர் மூலம் கள்ளத்தோணியில் இலங்கைக்கு அனுப்பி வைக்கும்படியும் விடுதலைப்புலிகள் என்னிடம் கேட்டுக்கொண்டனர்.
அவர்கள் சொன்னதை வெற்றிகரமாக செய்து முடித்தால், பெரிய அளவில் பணம் தருவதாகவும் கூறினார்கள். அவர்கள் சொன்னபடி சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து 8 சக்தி வாய்ந்த வயர்லெஸ் கருவிகளையும், 3 செயற்கை கோள் செல்போன்களையும், மற்றும் சில செல்போன் ரிப்பீட்டர்களையும்,விமானத்தில் அனுப்பி வைத்தனர்.
ஒரு ஆளிடம் இருந்து அந்த பொருட்களை நான் வாங்கி வைத்திருந்தேன். பின்னர் வெடிகுண்டு செய்ய பயன்படும் அம்மோனியம் நைட்ரேட் என்ற உரப்பொருள் 10 மூட்டையும் வாங்கி அனுப்பி வைக்கும்படி இலங்கையிலிருந்து விடுதலைப்புலிகள் எனக்கு தகவல் அனுப்பினார்கள். அதையும் வாங்கினேன்.
இந்த பொருட்களை அச்சரபாக்கத்தில் வசிக்கும் எனது நண்பர் அசோக்குமார் என்பவரிடம் கொடுத்து வைத்திருந்தேன். அவருக்கு அந்த பொருட்கள் விடுதலைப்புலிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்ற விவரம் தெரியாது. ராமேசுவரத்துக்கு இந்த பொருட்களை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்து வந்தேன். அதற்குள் போலீசார் என்னை பிடித்து விட்டனர் என்று கூறியுள்ளார் அந்தோணி.












Click it and Unblock the Notifications