திருமங்கலம்-மத்திய ரிசர்வ் படை கோரும் வைகோ
மதுரை: திருமங்கலம் தொகுதியில் திமுகவினரின் தாக்குதல் தொடர்ந்தால் தற்காப்புக்காக நாங்களும் எதிர்த்துத் தாக்க தயங்க மாட்டோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இந்தத் தொகுதியில் பாதுகாப்பு பணியில் மத்திய ரிசர்வ் போலீசாரை ஈடுபடுத்த வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
திருமங்கலம் தொகுதியில் அதிமுக பண பட்டுவாடாவில் இறங்கியதையடுத்து திமுகவினருடன் ஏற்பட்ட வன்முறை சம்பவம் தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் அதிமுகவினர் தேர்தல் பார்வையாளரிடம் புகார் கொடுத்தனர்.
திருமங்கலம் தொகுதியின் தேர்தல் பார்வையாளர் சுனில் குமாரை சந்தித்து அவர்கள் புகார் மனு கொடுத்தனர். அதில்,
திமுகவினர் அராஜக செயல்களில் ஈடுபட்டு வருகி்ன்றனர். திருமங்கலத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த முன்னாள் எம்எல்ஏ பொன்னுச்சாமி மற்றும் தமிழ்செல்வன், நிரஞ்சன், சேகர் ஆகியோரை நகர திமுக செயலாளர் ஸ்ரீதர் உள்பட சிலர் 2 கார்களில் வந்து பயங்கர ஆயுதங்களால் தாக்கி காயப்படுத்தினர்.
அதேபோல் பெருங்குடி அருகே அதிமுகவினரின் கார் கண்ணாடிகளை உடைத்து 3 பவுன் மோதிரம் மற்றும் பணத்தை பறித்துச் சென்றனர்.
திமுகவினர் திருமங்கலம் நகர் உள்பட பல்வேறு இடங்களில் தொடர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுகுறித்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கும் உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,
மதுரை மேற்கு, மத்திய தொகுதிகளில் நடந்த இடைத் தேர்தலின்போது வன்முறையை தூண்டிவிட்டனர். அதேபோல இங்கும் வன்முறையை ஏவிவிட்டிருக்கிறார்கள். அவர்கள் செல்லும்போது போலீசார் பாதுகாப்புக்கு செல்கிறார்கள். எங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை.
எனவே திருமங்கலம் தொகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை நிறுத்த வேண்டும்.
வன்முறை மூலம் எங்களை அச்சுறுத்திவிட முடியாது. ஆளும் கட்சியினரின் தாக்குதல் தொடர்ந்தால் தற்காப்புக்காக நாங்களும் எதிர்த்து தாக்க தயங்க மாட்டோம் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications