கர்நாடகம்: 5 தொகுதிகளில் பாஜக வெற்றி-காங் படுதோல்வி

கர்நாடக சட்டசபைக்கு கடந்த மே மாதம் தேர்தல் நடந்தது. இதில் தனிப் பெரும் கட்சியாக 110 சீட்களுடன் பாஜக வெற்றி பெற்றது. 3 சீட்கள் இருந்தால் பெரும்பான்மை பலம் கிடைக்கும் நிலை.
காங்கிரஸுக்கு 80 தொகுதிகளும், மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்கு 28 தொகுதிகளும் கிடைத்தன.
இதையடுத்து ஆறு சுயேச்சை எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் பாஜக ஆட்சியமைத்தது.
ஆட்சி அமைத்த பின்னர் ஆபரேஷன் லோட்டஸ் என்ற பெயரில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களை தன் பக்கம் இழுத்தது பாஜக. இதில் காங்கிரஸ் (3), மதச்சார்பற்ற ஜனதாதளத்தை (4) சேர்ந்த எம்.எல்.ஏக்கள் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்து விட்டு பாஜகவுக்கு தாவினர்.
இதையடுத்து காலியான இந்த 7 தொகுதிகள் மற்றும் ஒரு உறுப்பினர் மரணமடைந்ததால் இன்னொரு தொகுதி என 8 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்தப்பட்டது.
இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.
இதில், அரபாவி தொகுதியில், பாஜக வேட்பாளரும், எதியூரப்பா அமைச்சரவையில் இடம் பெற்றிருப்பவருமான பாலச்சந்திர ஜரகிகோலி 31 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸின் விவேக் ராய் பாட்டீலை தோற்கடித்தார்.
அதேபோல ஹுக்கேரி தொகுதியில், அமைச்சர் உமேஷ் கட்டி, காங்கிரஸ் வேட்பாளரை 14 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
மற்ற இரு அமைச்சர்களான சிவண்ண கெளடா நாயக் தேவதுர்காவிலும், ஆனந்த் அஸ்னோட்கர் கார்வாரிலும் வென்றனர்.
இவர்கள் தவிர தொட்டபல்லபூரில் நரசிம்ம சுவாமி வெற்றி பெற்றார்.
துருவகரேயில் மதச்சார்பற்ற ஜனதாதள வேட்பாளர் கிருஷ்ணப்பா வெற்றி பெற்றார்.
மதுகிரி தொகுதியில் முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மனைவி அனிதா வெற்றி பெற்றார்.
மத்தூர் தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தள வேட்பாளர் கல்பனா சித்தராஜு வெற்றி பெற்றார்.
இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதியில் கூட வெற்றி கிடைக்கவில்லை.
பாஜகவுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைத்து விட்டதால், ஆட்சியில் நீடிக்க சுயேச்சைகளின் ஆதரவு அதற்கு இனி தேவைப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications