திருமங்கலம்: அதிமுக எம்.எல்.ஏ.- 51 பேர் கைது
மதுரை: மதுரை மேலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ சாமியின் கார் உள்ளிட்ட அதிமுகவினரின் கார்களை போலீஸார் சோதனையிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸ் ஜீப் தாக்கப்பட்டது. இதையடுத்து எம்.எல்.ஏ உள்ளிட் 52 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருமங்கலம் தேர்தல் களம் நாளுக்கு நாள் தகிக்க ஆரம்பித்துள்ளது. வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததாக அதிமுகவினரை திமுகவினர் பிடித்து போலீஸில் கொடுக்க இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
இந்த மோதலில் 25-க்கும் மேற்பட்ட கார்கள் உடைக்கப்பட்டன. 10 பேர் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக தி.மு.க- அ.தி.மு.க.வைச் சேர்ந்த 230 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. வேட்பாளர் முத்துராமலிங்கத்துக்கு ஆதரவாக, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க் கள் தொகுதியில் முகாமிட்டு தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நேற்று இரவு மதுரை ரிங்ரோடு மண்டேலா நகர் சந்திப்பில் போலீஸ் சூப்பிரண்டு மனோகர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது தேர்தல் பணியை முடித்து விட்டு மேலூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ, சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்து கொண்டிருந்தனர். அவர்களை வழி மறித்த போலீசார் வாகனங்களில் சோதனையிட்டனர். அப்போது போலீசாருக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.
இந்த மோதலில் பெருங்குடி இன்ஸ்பெக்டரின் ஜீப் மற்றும் அ.தி.மு.க.வினரின் 5 வாகனங்களும்
உடைக்கப்பட்டன.
இதையடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. உடனடியாக சாமி எம்.எல்.ஏ. உள்பட 52 பேரை போலீசார் கைது செய்து பெருங்குடி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
நள்ளிரவில் மதுரை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அவர்கள் 52 பேரும் தங்க வைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சாமி எம்.எல்.ஏ. மீது போலீஸ் ஜீப்பை உடைத்தது, அரசு பணி செய்யவிடாமல் தடுத்தது உள்பட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நரேஷ் குப்தா கண்டிப்பான உத்தரவு:
இதற்கிடையே, தேர்தல் மோதல் தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்துவதற்காக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா இன்று மதுரை செல்கிறார்.
கலெக்டர் சீத்தாராமன், டி.ஐ.ஜி. கிருஷ்ணமூர்த்தி, போலீஸ் சூப்பிரண்டு மனோகர் ஆகியோரிடம் மோதல் தொடர்பாக அறிக்கை தரும்படி தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ள தாக தெரிய வந்துள்ளது.
தி.மு.க. பிரமுகர் மிசா பாண்டியன், திருமங்கலத்தில் அ.தி.மு.கவினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக எழுந்துள்ள புகார் குறித்தும் நரேஷ்குப்தா விசாரணை நடத்துகிறார்.
தேர்தல் வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் எஸ்பி மனோகரன் எச்சரித்துள்ளார்.