டோணிக்கு மீண்டும் மிரட்டல் கடிதம் - பாதுகாப்பு அதிகரிப்பு
ராஞ்சி: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் எம்.எஸ்.டோணிக்கு மீண்டும் மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இதையடுத்து அவருக்கு உயர்ந்தபட்ச பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு தற்போது இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் உள்ள டோணியின் வீட்டுக்கு சில தினங்களுக்கு முன்பு ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. அதில் ரூ. 50 லட்சம் பணம் தர வேண்டும். இல்லாவிட்டால் அனைவரையும் குடும்பத்தோடு தீர்த்துக் கட்டி விடுவோம் என மிரட்டப்பட்டிருந்தது. தஸ்லீம் என்பவர் இந்தக் கடிதத்தை எழுதியிருந்தார்.
இந்த நபர் மும்பையில் உள்ள தாதா தாவூத் இப்ராகிமின் கும்பலைச் சேர்ந்தவர் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் டோணி குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இரு கடிதங்களையும் ஒரே நபர்தான் எழுதியிருப்பதாக தெரிகிறது. தாவூத் இப்ராகிம் கும்பலைச் சேர்ந்த அந்த நபர் யார் என்பதை அறியும் முயற்சியி்ல போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
இந்த மிரட்டல்களைத் தொடர்ந்து டோணியின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இசட் பிரிவு பாதுகாப்பு அவருக்கு வழங்கப்படுகிறது. இதையடுத்து அவருக்கு 45 பாதுகாவலர்கள் ஷிப்ட் முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்பாக இருப்பார்கள்.