திருமங்கலம்-'மாடல்' வைகோ-காங்கிரஸ்காரர்கள் எங்கே?
அதே நேரத்தில் அதிமுக வேட்பாளர் முத்துராமலிங்கத்தை ஆதரித்து அதிமுகவினருக்கு இணையாக வைகோவும் அவரது மதிமுக தொண்டர்கள் மிகத் தீவிரமாக பிரச்சாரம் செய்து ஜெயலலிதாவையே இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றனர்.
கிட்டத்தட்ட திருமங்கலம் முகாமிட்டுவிட்ட வைகோ, தனது கட்சியினரையும் அதிமுகவினரையும் அதிமுக இரண்டாம் மட்டத் தலைவர்களையும் அரவணைத்துக் கொண்டு கூட்டணிக்கே ஒரு 'மாடல்' மாதிரி திகழ்கிறார்.
அதே போல மார்க்சி்ஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் தொண்டர்களும் அதிமுகவினருடன் தோளோடு தோள் நின்று பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதே நேரத்தில் மிக மிகச் சில இடங்களில் தான் திமுகவினருடன் காங்கிரஸ் கட்சியினரை பார்க்க முடிகிறது. பிரச்சாரத்துக்குச் செல்லும் திமுக முன்னணித் தலைவர்கள், அமைச்சர்கள் கூட காங்கிரஸ்காரர்களைப் பற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
போய் வலிய அழைத்து 'கவனித்தால்' தான் காங்கிரஸ்காரர்கள் பிரச்சாரத்துக்கு வருவார்கள் என்பதால், அவர்களை திமுகவினர் கண்டுகொள்ளவும் இல்லை. அந்தந்தப் பகுதி காங்கிரஸ் முக்கிய பிரமுகர்களைக் கூட திமுகவினர் உடன் சேர்த்துக் கொள்ளவில்லை.
கைத்தறி நகரில் நடந்த பிரச்சாரத்திலும் வேறு சில இடங்களிலும் மட்டுமே காங்கிரஸ்காரர்களை பார்க்க முடிந்தது.
இன்று முதல் விஜயகாந்த் 7 நாள் பிரசாரம்:
இதற்கிடையே தேமுதிக வேட்பாளர் தனபாண்டியனை ஆதரித்து அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் இன்று முதல் 7 நாட்கள் திருமங்கலம் தொகுதியில் கிராமம் கிராமமாக சென்று வாக்கு சேகரிக்கிறார்.
ஏறகனவே இந்தத் தொகுதியை பிரேமலதா விஜயகாந்த் கடந்த ஒரு வாரமாக சுற்றி வந்துவிட்டார். இந் நிலையில் விஜயகாந்த்தின் சூறாவளி பிரசாரம் தொடங்குகிறது.
ஸ்டாலினும் வருகிறார்..5 நாட்கள் சூறாவளி பிரசாரம்:
இதற்கிடையே லதா அதியமானை ஆதரித்து அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை முதல் 5 நாட்கள் கிராமம், கிராமமாக பிரசாரம் செய்கிறார்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம்... வைகோ:
இதற்கிடையே இன்று சென்னை திரும்பிய வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில்,
திருமங்கலத்தில் குண்டர்கள், ரெளடிகள் துணையோடு திமுகவினர் அராஜக வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். திமுகவினரால் தாக்கப்பட்ட அதிமுக எம்எல்ஏ சின்னச்சாமி படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சுதந்திர இந்தியாவில் இதுவரை நடைபெறாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் ஸ்பெக்ட்ரம் ஊழல் நடைபெற்றுள்ளது. இதில் கிடைத்த பணத்தைக் கொண்டு திமுகவினர் ரூ.500 கோடி கூட செலவிட்டு வெற்றி பெற முயற்சிக்கலாம். திருமங்கலத்தில் திமுகவினர் பயங்கர வன்முறைகளை அரங்கேற்ற திட்டம் தீட்டியுள்ளனர்.
தொகுதியை தேர்தல் ஆணையம் தனது நேரடி கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்து ராணுவம் பாதுகாப்புடன் கூடுதல் பார்வையாளர்களை நியமித்து தேர்தலை நடத்த வேண்டும்.
திருமங்கலத்தில் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. திருமங்கலம் வெற்றியைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிமுக அமோக வெற்றி பெறும் என்றார் வைகோ.