துபாய்-கார்களை விமான நிலையத்தில் விட்டுவிட்டு ஓடும் வெளிநாட்டினர்
சமீபத்தில் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இவ்வாறு விடப்பட்ட 80 கார்களை காவல்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
இவ்வாறு கார்களை விட்டு விட்டு நாட்டை விட்டு ஓடியோர் அனைவருமே வேலைகளை இழந்தவர்கள் ஆவர். இவர்கள் கார்களுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய தவணைப் பணத்தை திருப்பிச் செலுத்த முடியாமல் கார்களை விமான நிலையத்தில் கொண்டு வந்து விட்டு விட்டு பிளைட்டைப் பிடித்து சொந்த நாடு திரும்பி விட்டனர்.
இதுகுறித்து விமான நிலைய பாதுகாப்புப் பிரிவு இயக்குனர் முகம்மது பின் தானி கூறுகையில், சமீபத்தில் 60 கார்களை பறிமுதல் செய்தோம். மொத்தமாக இதுவரை 80 கார்கள் அனாதரவாக விடப்பட்டுள்ளன என்றார்.
துபாயில் விலைவாசி படு உச்சத்தை நோக்கிப் போய்க் கொண்டுள்ளது. குறிப்பாக வீட்டு வாடகைகள் பயங்கரமாக உயர்ந்துவிட்டன.
கீழ் மட்ட, நடுத்தர வர்க்கத்தினர் வாங்கும் ஊதியம் அவர்களுக்கே போதவில்லை. இதில் அவர்கள் சொந்த நாட்டில் உள்ள குடும்பத்தினருக்கும் பணம் அனுப்பியாக வேண்டும்.
மேலும் சர்வதேச பொருளாதார சரிவின் தாக்கம் துபாயையும் விட்டு வைக்கவில்லை. அங்கு கட்டுமானப் பணிகள் முடங்க ஆரம்பித்துள்ளன.
பல நிறுவனங்கள் தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கி வருகின்றன. இவ்வாறு நீககப்படுவோரில், கார்களை கடனுக்கு வாங்கியவர்கள்தான் இதுபோல கார்களை விமான நிலையத்தில் போட்டு விட்டு துபாயை விட்டேப் பறந்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு இதுபோல 455 கார்களை துபாய் போலீஸார் மீட்டுள்ளனராம்.