தூத்துக்குடியில் கள்ள துப்பாக்கி: சிக்கும் 'விஜபி'க்கள்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் கள்ளத்துப்பாக்கிகள் விற்கப்பட்ட விவகாரத்தில் முக்கியப் புள்ளிகளைப் பிடிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடியில் தனிப்படை போலீசார் நடத்திய ரெய்டில் திருட்டுத்தனமாக துப்பாக்கி விற்கும் கும்பல் சிக்கியது.
இதில் சென்னை வண்டலூரிலுள்ள ஓர்க் ஷாப்பில் வேலை பார்த்த தூத்துக்குடி தெர்மல் நகரை சேர்ந்த சரவணக்குமார், முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த லாரி ஷெட் உரிமையாளர் மாயாண்டி, இந்திரா நகரை சேர்ந்த பழனிக்குமார், கேவிகே நகரில் டீக்கடை நடத்தி வந்த மணிமாறன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து 5 வெளிநாட்டு துப்பாக்கிகளையும், 7.6 மி.மீ, 9 மி.மீ. ரக 33 தோட்டாக்களையும் கைப்பற்றினர்.
5 துப்பாக்கிகளும் நோபாள நாட்டிலிருந்து கடத்தி வரப்பட்டதும், சென்னையி்ல் தலைமறைவாக இருக்கும் தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த பிரவுன் சுகர் கடத்தல் குற்றவாளியான செல்வம் கடத்தி வந்துள்ளதும் துப்பாக்கி விற்கும் கும்பலின் தலைவனாக செல்வம் செயல்பட்டதும் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட சரவணகுமாரிடம் இருந்து ஒரு துப்பாக்கி கைப்பற்றப்பட்டது. மற்ற 4 துப்பாக்கிகள் தூத்துக்குடியை சேர்ந்த விஐபிக்களுக்கு வி்ற்பனை செய்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து விஐபிக்களை ரகசியமாக சந்தித்த போலீசார் 2 பேரிடம் இருந்து 4 துப்பாக்கிகளை கைப்பற்றினர். ஆனால் 5 துப்பாக்கிகளும் பிடிபட்டவர்களிடம் இருந்துதான் கைப்பற்றியதாக ஏற்கனவே போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் தூத்துக்குடியை சேர்ந்த சில விஐபிக்கள் முன்ஜாமீன் முயற்சி செய்து வருகின்றனர். தற்போது தூத்துக்குடி மற்றும் சென்னையை பரபரப்புக்குள்ளாக்கியுள்ள துப்பாக்கி விவகாரத்தில் கிணறு தோட்ட பூதம் புறப்பட்ட கதையாக தினம் ஒரு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
இதனால் பிடிபட்ட 4 குற்றவாளிகளையும் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டில் அனுமதி கேட்டுள்ளனர். அப்போது அவர்கள் பல்வேறு உண்மைகளை தெரிவிக்கலாம் என்ற சூழ்நிலை உள்ளது. இதனால் அந்த விஐபிக்கள் கலக்கத்தில் உள்ளனர்.