அப்சல் குரு குறித்து சிவராஜ் பாட்டீல் கருத்து - உத்தவ் தாக்கரே விளாசல்
மும்பை: மக்களைக் கொல்வதற்கும் ஒரு துணிச்சல் வேண்டும் என்று பேசிய முன்னாள் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலை, பாகிஸ்தானை விட அபாயகரமானவர் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார்.
தொடர் தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து சிவராஜ் பாட்டீலின் பதவி பறிபோனது. ஆனால் பதவியிலிருந்து போன பின்னரும் கூட எதிர்க்கட்சியினரின் விமர்சனத்திற்கு தொடர்ந்து ஆளாகி வருகிறார் பாட்டீல்.
மகாராஷ்டிர மாநில மரத்வாடா நகரில், அவரை சந்தித்த செய்தியாளர்கள், அப்சல் குருவுக்கு ஏன் தூக்குத் தண்டனை தராமல் உள்ளது அரசு என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த சிவராஜ் பாட்டீல், குருவைப் புகழ்ந்து பேசுவது போல, மக்களைக் கொல்வதற்கும் ஒரு துணிச்சல் இருக்க வேண்டும் என்றார்.
இது மகாராஷ்டிராவில் புயலைக் கிளப்பியுள்ளது. இதுகுறித்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறுகையில், இவரைப் போன்ற தலைவர்கள் பாகிஸ்தானை விடவும் அபாயகரமானவர்கள். இவரது ரத்தத்தில் இந்திய ரத்தம்தான் ஓடுகிறதா அல்லது இத்தாலி நாட்டு ரத்தம் ஓடுகிறதா என்பதை சோதிக்க வேண்டும்.
இந்தியாவின் முக்கிய எதிரி பாகிஸ்தான் அல்ல, மாறாக காங்கிரஸ் கட்சிதான் என்றார்.
மூத்த பாஜக தலைவர் கோபிநாத் முண்டே கூறுகையில், சிவராஜ் பாட்டீலின் பேச்சு துரதிர்ஷ்டவசமானது.
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டபடி அப்சல் குரு தூக்கிலிடப்பட வேண்டும். பாஜக ஆட்சிக்கு வந்தால் உடனடியாக குருவின் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்றார்.