இன்று இரவு முதல் லாரிகள் ஸ்டிரைக் - தமிழகம் ஸ்தம்பிக்கும்
சென்னை: தமிழகம் முழுவதும் இன்று நள்ளிரவு முதல் லாரிகள் ஸ்டிரைக் தொடங்குகிறது. அகில இந்திய அளவில் நடைபெறவுள்ள இந்த ஸ்டிரைக்கால் காஸ் சிலிண்டர் சப்ளை உள்ளிட்டவை கடுமையாக பாதிக்கும் அபாயம் எழுந்துள்ளது.
கச்சா எண்ணை விலை சர்வதேச சந்தையில் வெகுவாக குறைந்துள்ள போதிலும், டீசல் விலையை பெருமளவில் குறைக்காமல் உள்ள மத்திய அரசைக் கண்டித்தும், டயர் மீதான இறக்குமதி வரியைக் குறைக்க வேண்டும், ரேடியர் டயர் இறக்குமதி மீதான தடையைக் குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நள்ளிரவு முதல் காலவரையற்ற ஸ்டிரைக்குக்கு அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.
அதன்படி இன்று நள்ளிரவு முதல் லாரி ஸ்டிரைக் திட்டமிட்டபடி தொடங்கியது. தமிழகத்தில் மட்டும் ஒன்னே முக்கால் லட்சம் லாரிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்கின்றன.
டிரெய்லர், டேங்கர்கள், அரைபாடி உள்ளிட்ட அனைத்து வகை லாரிகளும் இந்த போராட்டத்தில் பங்கேற்கின்றன.
இதனால், காஸ் சிலிண்டர் சப்ளை உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகள் கடுமையாக பாதிக்கும் அபாயம் எழுந்துள்ளது.
தூத்துக்குடியில் ...
லாரிகள் வேலை நிறுத்தத்தில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 5000 லாரிகள் பங்கேற்கின்றன. வேலை நிறுத்தம் நீடித்தால் காய்கறி விலை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட லாரி உரிமையாளர் சங்க தலைவர் சாமுவேல் கூறுகையில், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. ஆனால் மத்திய அரசு கண்துடைப்பாக விலையை லிட்டருக்கு ரூ.2 மட்டும் குறைத்துள்ளது. டீசல் லிட்டருக்கு ரூ.10 குறைக்க வேண்டும். அப்போதுதான் லாரி வாடகையை குறைக்க இயலும்.
லாரி வாடகை குறைந்தால் தான் அத்திவாசிய பொருட்களின் விலையும் குறையும். டீசல் விலையை குறைக்க கோரி வரும் 5ம் தேதி முதல் அகில இந்திய அளவில் நடைபெறும் லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் நாங்கள் பங்கு கொள்கிறோம்.
மாவட்டத்தில் 5 ஆயிரத்து 500 லாரிகள் ஓடாது என்றார் அவர்.
வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பால் தூத்துக்குடி துறைமுகத்தில் ஏற்றுமதி-இறக்குமதி பணிகள் பாதிக்கப்படும்.