ஜெ. பிரசாரத்தில் கல்வீச்சால் பரபரப்பு
மதுரை: திருமங்கலம் தொகுதியில், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பிரசாரத்தில் திடீரென சிலர் கல்வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களைப் பிடிக்க முயல்வதற்குள் அந்தக் கும்பல் ஓடி விட்டது.
திருமங்கலம் அதிமுக வேட்பாளர் முத்துராமலிங்கத்தை ஆதரித்து நேற்று ஜெயலலிதா பிரசாரத்தைத் தொடங்கினார்.
வலையங்குளம் மெயின் ரோட்டில் அவர் பிரசாரம் செய்து கொண்டிருந்தபோது, அங்கிருந்த ஒரு வீட்டின் மாடியிலிருந்து சிலர் திடீரென சரமாரியாக கற்களை எடுத்து வீசினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போலீஸார் உடனடியாக அந்த மாடிக்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் கல்வீசிய கும்பல் ஓடி விட்டது.
மர்மப் பையால் பரபரப்பு ...
முன்னதாக, ஜெயலலிதா தங்கியிருந்த மதுரை சங்கம் ஹோட்டலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் பிரசார வேனுக்கு அருகே கிடந்த மர்மப் பையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அதில் வெடிகுண்டு ஏதேனும் இருக்கிறதா என்பது குறித்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையிட்டனர். அப்போது ஓடி வந்த ஆயுதப்படை போலீஸ்காரர் மணிகண்டன், அது தன்னுடைய பைதான் என்று கூறவே அங்கு நிம்மதி பிறந்தது.
இதுபோல அஜாக்கிரதையாகவை பையை வைப்பது என்று உயரதிகாரிகள் மணிகண்டனை கண்டித்தனர்.
குறுக்கே பாய்ந்த தொண்டர் ...
மதுரை வந்த ஜெயலலிதா அங்கிருந்து சங்கம் ஹோட்டலுக்கு காரில் சென்றார். அப்போது தல்லாகுளம் பெரியார் சிலை அருகே கார் வந்தபோது, திடீரென ஒருவர் குறுக்கே பாய்ந்தார்.
இதையடுத்து ஜெயலலிதாவின் வேன் சடர்ன் பிரேக் போட்டு நிறுத்தப்பட்டது. அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸார் விரைந்து வந்து அந்த நபரைப் பிடித்தனர். விசாரணையில் அவரது பெயர் முருகேசன், அதிமுக தொண்டர் எனத் தெரிய வந்தது.
ஜெயலலிதாவிடம் மனு கொடுப்பதற்காக அவர் வேன் முன்பு பாய்ந்தது தெரிய வந்தது. பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.