பாக். கைவிட்டதை அறியாத அஜ்மல் கஸாப்
மும்பைத் தாக்குதலில் ஈடுபட்டு சிக்கியுள்ள கஸாப் தற்போது மும்பையில் பலத்த பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளான்.
கைதானதைத் தொடர்ந்து சட்ட உதவி கோரி அவன் பாகிஸ்தான் அரசுக்குக் கடிதம் எழுதியிருந்தான். இந்தக் கடிதம் பாகிஸ்தானிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் இதை பாகிஸ்தான் அரசு நிராகரித்து விட்டது. முதலில் கஸாப் பாகிஸ்தானிதான் என்பதை இந்தியா நிரூபிக்க வேண்டும். பிறகுதான் அவனது கோரிக்கை குறித்து பரிசீலிக்க முடியும் என பாகிஸ்தான் கூறி விட்டது.
ஆனால் இது எதுவுமே கஸாப்புக்குத் தெரியாது. இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், சட்ட உதவி கோரி தான் எழுதிய கடிதம் குறித்து அவ்வப்போது கேட்கிறான் கஸாப். கடிதம் பரிசீலனையில் இருப்பதாக அவனிடம் கூறி வைத்துள்ளோம்.
பாகிஸ்தானில் நடந்து வரும் நிகழ்வுகள் குறித்து அவனுக்குத் தெரியாது. தனது கடிதத்தை பாகிஸ்தான் அரசு நிராகரித்தது குறித்தோ, தான் பாகிஸ்தானியே அல்ல என்று பாகிஸ்தான் கூறி வருவதோ கஸாப்புக்குத் தெரியாது.
பொருத்தமான நேரத்தில் நடந்ததை அவனிடம் தெரிவிப்போம். இது எங்களது விசாரணை உத்திகளில் ஒன்று என்றார்.
இதற்கிடையே தான் செய்தது குறித்து கஸாப் சற்றும் கவலைப்படவில்லை என்று ஆர்தர் சாலை சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் அடையாள அணிவகுப்புக்காக கஸாப் அங்கு அழைத்துச் செல்லப்பட்டான்.
அப்போது அவனது முகத்தில் எந்தவித பதட்டமும் இல்லை. தான் செய்தது சரி என்று அவன் கூறுகிறான். தனது செயலுக்காக அவன் வருத்தமே படவில்லை என்றார் அவர்.