6 பேர் சாவுக்குக் காரணமான 2 கந்து வட்டிக் கொடூரர்கள் கைது
நெல்லை: நெல்லையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பரிதாபமாக தற்கொலை செய்து கொள்ளக் காரணமாக இருந்ததற்காக கந்து வட்டி வசூலித்த ஒரு வக்கீல் உள்ளிட்ட 2 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் 12 பேரைக் கைது செய்யவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
பாளையங்கோட்டை சிவன் கோவில் பிராமணர் தெருவை சேர்நதவர் கோபால் ஆசாரி. நகை தொழில் செய்து வந்த இவர் கடன் நெருக்கடியால் கடந்த 3ம் தேதி தனது குடும்பத்தினர் 6 பேருடன் தற்கொலை செய்து கொண்டார்.
120 வட்டிக்கு கந்து வட்டி வசூலித்ததால்தான் கோபால் ஆசாரியின் குடும்பம் இந்த நிலைக்கு ஆளானது. மேலும், வக்கீல் ரவி என்பவர், கொடுத்த கடனுக்கு கந்து வட்டி கொடுக்க முடியாததால் ஆசாரியின் கவரிங் நகை தயாரிப்புக் கூடத்தை மூடி சாவியையக் கொண்டு சென்று விட்டாராம்.
இதனால் தொழிலை நடத்த முடியாமல் போனதால் அவமானத்திலும், சோகத்திலும், கோபால ஆசாரியின் குடும்பத்தினர் தற்கொலை செய்து கொண்டனர்.
இதுகுறித்து உதவி கமிஷனர் முருகேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் கோபால் ஆசாரிக்கு கடன் நெருக்கடி கொடுத்த பாளையங்கோட்டை கடிகார ஆசாரி தெருவை சேர்நத வக்கீல் ரவி, டவுண் மாதா பூங்கொடி தெருவை சேர்ந்த செல்லையா ஆசாரி மகன் குமார் ஆகிய இருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து உதவி கமிஷனர் கூறுகையில், கோபால் ஆசாரி தற்கொலை வழக்கில் 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வக்கீல் ரவி, பைனான்சியர் குமார் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விரைவில் மேலும் சிலர் கைது செய்யப்படுவார்கள். கைதான வக்கீல் ரவி, குமார் இருவர் மீதும் கந்து வட்டி தடுப்பு சட்டம், 4ம் பிரிவின் கீழும், இந்திய தண்டனை சட்டம் 306ன் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து கடன் தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றார்.












Click it and Unblock the Notifications