21ம் தேதி கூடுகிறது தமிழக சட்டசபை
சென்னை: தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் வரும் 21ம் தேதி தொடங்குகிறது. கவர்னர் உரையுடன் தொடங்கும் இந்தக் கூட்டத் தொடர் ஒருவார காலம் நடைபெறும் எனத் தெரிகிறது.
சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் என்பதால் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா உரை நிகழ்த்துகிறார்.
மக்களவைக்கு இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் அறிவிப்பு எந்நேரமும் வெளிவரும் நிலை உள்ளது.
இந்த அறிவிப்பு வெளியானால் உடனடியாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். அப்போது மத்திய, மாநில அரசுகள் எந்த புதிய திட்டத்தையும் அறிவிக்க முடியாது.
இதனால் கூடவுள்ள சட்டமன்றக் கூட்டத்தில் கவர்னர் உரையில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கூட்டத் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் சில வாரங்களில் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும். அது இரு மாத காலத்துக்கு நடைபெறும்.