For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்டாலின், அதிமுக மீது வழக்கு-தேர்தல் ஆணையம் உத்தரவு

By Sridhar L
Google Oneindia Tamil News

Stalin
மதுரை: திருமங்கலம் தொகுதி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு தேர்தல் அதிகாரியும், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவருமான சீத்தாராமனுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதேபோல அதிமுக சார்பில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த கோவை மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் தண்டபாணி மீதும் வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திருமங்கலம் தொகுதி தேர்தல் பிரசாரம் முதல் நாளிலிருந்தே அனல் பறந்து வருகிறது. வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பணம் கொடுத்ததாக அவர்களில் சிலரை திமுகவினர் கையும் களவுமாக பிடித்தனர்.

இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் மூண்டது. பல வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

இரு தரப்பும் சரமாரியாக தேர்தல் அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்களிடம் புகார்களைக் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தொகுதிப் பாதுகாப்புக்காக தற்போது துணை ராணுவப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில் அதிமுக தரப்பில் புதிய வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. அதில் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேனில் அமர்ந்தபடி ஒருவருக்கு பணம் கொடுப்பது போன்ற காட்சி உள்ளது.

இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறுகையில், ஸ்டாலினும் மற்ற திமுக அமைச்சர்களும் பணம் கொடுப்பது போன்ற வீடியோ வெளியாகியிருப்பது எந்த ஆச்சரியத்தையும் கொடுக்கவில்லை.

திமுக எப்படியெல்லாம் கீழ்த்தரமாக செயல்படுகிறது என்பதையே இது காட்டுகிறது. தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக வாக்காளர்களுக்கு அவர்கள் பணம் கொடுக்கின்றனர் என்றார்.

இந் நிலையில் ஸ்டாலின் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தது தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரித்தது. இதைத் தொடர்ந்து ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சித் தலைவருக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக மீதும்:

அதேபோல வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தது தொடர்பாக கோவை மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் தண்டபாணி என்பவர் மீதும் வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், பணம் கொடுத்தது தொடர்பாக இரு கட்சிகளும் கொடுத்த பல்வேறு புகார்களின் அடிப்படையில் இரு கட்சிகளும் விளக்கம் அளிக்க வேண்டும் என திமுக, அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸும் அனுப்பியுள்ளது.

பணம் கொடுக்கவில்லை-ஸ்டாலின்:

இந் நிலையில் வாக்காளர்களுக்கு பணம் தரவில்லை என்று அமைச்சர் ஸ்டாலின் மறுத்துள்ளார். அவர் கூறுகையில்,

திருமங்கலம் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தின்போது, நான் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாகக் கூறுவதில் உண்மை இல்லை. எந்த வாக்காளருக்கும் நான் பணம் கொடுக்கவில்லை.

நான் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது, புதிதாக பிறந்த குழந்தையை என்னிடம் கொடுத்து வாழ்த்து தெரிவிக்கக் கூறினார்கள். அந்த குழந்தைக்கு நான் பிறந்த நாள் பரிசு கொடுத்தேன்.

அதைத் தான் நான் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக சொல்கிறார்கள். நான் ஒரு குழந்தைக்கு பிறந்த நாள் பரிசு தான் கொடுத்தேன் என்பதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. தேவைப்படும் போது அந்த ஆதாரத்தை காட்டுவேன் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X