'இலங்கை'-மத்திய அரசிலிருந்து பாமக விலகல்?
சென்னை: இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசு துரோகம் இழைத்து விட்டது. தமிழக சட்டமன்றத்தை அவமதித்து விட்டது. கூட்டணியிலிருந்து விலகுவது குறித்து பரிசீலிக்கிறோம். அடுத்த மாதம் இதுகுறித்து முடிவெடுப்போம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை விவகாரத்தில் தமிழக அரசையும், தமிழக மக்களையும் மத்திய அரசு ஒட்டு மொத்தமாக அவமானப்படுத்தி விட்டது.
இலங்கையில் ஒட்டு மொத்த தமிழினமும் அழிய வேண்டும் என்று மத்திய அரசில் உள்ள சில அதிகாரிகள் செயல்படுகிறார்கள். அதற்கு மத்திய அரசும், அமைச்சர்களும் துணை போகிறார்கள். இலங்கையில் தமிழினம் அழிவதை வேடிக்கை பார்ப்பது கடும் கண்டனத்திற்குரியது.
இங்குள்ள தமிழர்களின் சுயமரியாதைக்கும், தன்மானத்திற்கும் மிகப்பெரிய சோதனை ஏற்பட்டு நாம் தலைகவிழ்ந்து நிற்கும் நிலை உருவாகியுள்ளது என்றார்.
மத்திய அரசு இந்த அளவிற்கு அவமதித்துவிட்டது என்று குற்றம் சாட்டும் நீங்கள், மத்தியில் ஆட்சி செய்யும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து வெளியேறுவீர்களா என்று செய்தியாளர்கள் திரும்பத் திரும்ப கேட்டனர்.
அதற்கு ராமதாஸ், முதலமைச்சர் இது தொடர்பாக என்ன முடிவெடுக்கிறார் என்பதை பொறுத்து முடிவு செய்யப்படும் என்று பதிலளித்தார்.
ஒரு கட்டத்தில் ஒரு மாதம் பொறுத்திருங்கள் என்றார்.
இரு தினங்களுக்கு முன் காங்கிரசுடன் தான் பாமகவுக்கு கூட்டணி, திமுகவுடன் அல்ல என்று கூறியிருந்தார். இப்போது ராமதாசின் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.