ராமலிங்க ராஜூ மீது கிரிமினல் நடவடிக்கை!-செபி
மும்பை: சத்யம் நிறுவன கணக்குகளில் பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததுடன், அவற்றை ஒப்புக் கொண்டு கடிதம் கொடுத்துள்ள ராமலிங்க ராஜூ மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பங்கு பரிவர்த்தனை கட்டுப்பாட்டு வாரியம் செபி அறிவித்துள்ளது.
இதற்குத் தேவையான கூடுதல் ஆதாரங்களைத் தருமாறு சத்யம் நிறுவன இயக்குநர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கோரியுள்ளது செபி.
இதுகுறித்து செபி தலைவர் பாவே கூறுகையில், சத்யம் தலைவர் ராமலிங்க ராஜூவின் கடிதம் மிக முக்கியமான ஒன்று. இன்றைய பங்குச் சந்தையின் போக்கை மிகவும் பாதித்துள்ளது. அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க பாரபட்சமான அணுகுமுறையைப் பின்பற்ற உள்ளோம்.
முழுமையான ஆதாரங்களை விரைவில் திரட்டிவிடுவோம், என்று கூறியுள்ளார்.
இன்னொரு புறம், மத்திய அரசின் கம்பெனிகள் விவகாரத் துறையும் சத்யம் நிறுவன முறைகேடுகளை விசாரித்து வருகிறது.
இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் ராமலிங்க ராஜூவுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கக் கூடும்.
தப்பிக்க முடியாது!
இந்த முறைகேடுகளில் மற்றவர்களுக்குப் பங்கு இல்லை என என்னதான் ராஜூ கூறினாலும், கார்ப்பரேட் நிறுவன சட்டப்படி, ஒவ்வொரு இயக்குநரும் கூட்டுப் பொறுப்பு உடையவராகிறார். முக்கிய பொறுப்புகளில் உள்ள தன் மகன், மனைவி மற்றும் நிறுவனத்தில் உள்ள உறவினர்களைக் காக்கவே ராஜூ மொத்தப் பழியையும் தன் பக்கம் இருக்குமாறு கடிதம் எழுதியுள்ளார்.
ஆனால் ராஜூ மீது கிரிமினல் வழக்குப் பாயும் பட்சத்தில், அதில் இயக்குநர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளின் பங்கு குறித்தும் விசாரணை நடத்தப்படும் என சத்யம் நிறுவன முறைகேடுகள் குறித்து ஏற்கெனவே விசாரணையைத் தொடங்கிவிட்ட புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.